நேர்காணல் தோல்விக்குப் பின்னர் செய்ய வேண்டியது என்ன?
உங்கள் வாழ்வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு நேர்காணலுக்கு போதுமான
தயாரிப்புகளைச் செய்து, வெற்றிகரமாக நேர்காணலை நீங்கள் எதிர்கொண்டு
இருக்கலாம். அந்த நேர்காணலுக்காக எந்த ஒரு விஷயத்தையும் விடுதல் இன்றி
தயாரித்திருக்கலாம். இருந்த போதும் முடிவு உங்களுக்கு சாதகம் இல்லாமல்
போயிருக்கலாம்.
தோல்வியின் வலியில் துவண்டு போன நீங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றோ, தேர்ச்சி முறையே தவறானது என்றோ முடிவுக்கு வந்திருப்பீர்கள்.
நிச்சயமாக தோல்வி என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால் தோல்வியின் காரணமாக நாம் இப்படியே வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் எதிர்காலத்திற்கு எந்த உபயோகமும் இல்லை. எனவே இனியும் இழந்ததை எண்ணி நம்மையும் வருத்தப்படுத்திக் கொண்டு, நமது
சுய மதிப்பையும் நம்மிடமே இழப்பதை விட்டுவிட்டு நேர்மறையான சில
அடிப்படைகளை மனதில் வைத்து அடுத்த கட்ட செயல் திட்டத்தில் இறங்குவதுதான்
நமது எதிர்காலத்திற்கான விளக்கை ஏற்றும்.
நமக்கு வேலை கிடைப்பதை ஏராளமான காரணிகள் பாதிக்கின்றன. அவற்றில் சில நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை; ஆனால் மற்றவையோ முற்றிலும் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இவற்றில்
நமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பனவற்றை முழுமையாக நமக்கு சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்வதுதான் நமது வெற்றிக்கான முதல் படியாகும்.
ஒரு தோல்வி என்பது ஏற்றுக் கொள்ள கடினமான ஒன்றுதான் என்ற
போதும் இது நமது சுயமதிப்பை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் நமது
மனதைத் தேற்றிக் கொண்டு நமது எதிர்மறை அம்சங்களை சாதுர்யமாகக் கையாள்வதன்
மூலம் நமது பலவீனங்களையே நமது பலமாக மாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட
உண்மையாகும்.
போதுமான தயாரிப்புகள் இல்லாமல் இருத்தல்
நேர்காணலை நாம் வெற்றிகரமாக முடித்தது போன்ற எண்ணம் நமக்கு
இருந்த போதும் சில சமயங்களில் நமது பணி வாய்ப்பாளர் கிணற்றில் போடப்பட்ட
கல்லைப் போல அமைதி காப்பது நமது பொறுமைக்கே சவாலாக இருக்கும்.
இது ஏன் நிகழ்கிறது தெரியுமா ?
நாம் விண்ணப்பித்திருக்கும் வேலைக்கு தேவையே இல்லாத பல விஷயங்களில் நமது கவனத்தை செலுத்தி நேர்காணலுக்கு நாம் தயாராகி இருப்போம். உதாரணமாக நமது கவனம் அதிகபட்சம் நாம் முடித்த பட்டப் படிப்பின் பாடத்திலேயே இருப்பதைச் சொல்லலாம். பட்டப் படிப்பில் நாம் பெற்ற மதிப்பெண்கள், நமது
சிறப்பு தகுதி நிலை ஆகியவற்றை நாம் சமர்ப்பித்திருக்கும் சான்றிதழ்கள்
வாயிலாக நமது பணி வாய்ப்பாளர் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்திருப்பார். எனவே அது குறித்து அதிக அக்கறையை அவர் காட்டுவதில்லை என்பதே உண்மை.
நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தோண்டிப் பார்க்க அவருக்கு நேரம் இருப்பதில்லை. அப்படியானால் எதற்காக இந்த நேர்காணல் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது அல்லவா? நேர்காணல் என்பதன் மூலம் இந்த சாதனைகளைச் செய்தவரை அவர்கள் நேரில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் யதார்த்தமாகும்.
உலகளவில் பெயர் பெற்ற டாக்டர் சாமுவேல் ஜான்சன் அவர்களை
அவரது சுமாரான தோற்றத்தை வைத்து எடை போட்டவர்கள் அவருடன் பேசத் துவங்கிய
சில நொடிகளிலேயே அவரது பேச்சை கவனிப்பதை மட்டும் செய்யும் அளவிற்கு
ஜான்சன் அவர்கள் ஆளுமைத் தன்மை கொண்டவராக இருந்தாராம். இந்த ஆளுமைத் தன்மையை எடை போடுவதுதான் ஒரு நேர்காணலின் முக்கிய நோக்கம் என்பதை நாம் மனதில் இருத்த வேண்டும்.
ஒரு நேர்காணலின் போது கேட்கப்படும் கேள்வி வெளித்தோற்றத்தில் தேவையற்ற கேள்வி என்பது போல் இருந்தாலும், அதற்கு
பதில் சொல்வதன் மூலம் நம்மைப் பற்றிய கருத்தை அழுத்தமாகப் பதிய வைக்க
முடியுமா என்ற கோணத்திலேயே யோசித்து பதில் அளிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு நமது இயல்புத் தன்மையை இழப்பதோ, கோபமாகப் பதில் தருவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அதே போல், நமது கல்வித்தகுதி எவ்வளவு சிறப்பானதாக இருப்பினும், நமது நேர்காணலை நடத்துபவர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். நமது சாதனைகளே நமது சிந்தனையை மறைத்து நமது வெற்றியைத் தடுக்கும் பிரச்னையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம் ஆகும்.
மிகச் சிறந்த கல்வித் தகுதிகளை கொண்டவர்கள் தங்களை
பிரதிநிதிப்படுத்தும் முயற்சிக்காக தங்கள் இயல்புத் தன்மைக்கு மாறாக
செயற்கைத் தன்மையுடன் நேர்காணலை எதிர்கொள்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். செயற்கையான அமைதியும், இயல்புக்கு பொருந்தாத நடையுடை பாவனைகளும் தோல்விக்குத்தான் வழிகாட்டும்.
ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்திருந்தாலும் சரி, இனி எதிர்காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தாலும் சரி, இதற்கு நாம்தான் காரணம் என்று புரிந்து கொண்டு உங்களைப் பற்றிய சுய ஆராய்ச்சியை பாரபட்சமின்றி செய்யுங்கள். உங்கள் பலம், பலவீனம், வாய்ப்புகள், பிரச்னைகள் என்று நான்கு கோணத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். இதில் கிடைக்கும் விடைகளைக் கொண்டு உங்களை மேன்மைப்படுத்துங்கள். ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது என்ற தங்க வார்த்தையில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
பணி வாய்ப்பாளர் என்பவர் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. பல
ஆண்டுகளுக்கு தங்களுடன் பணி புரியப் போகும் நபர் அப்பழுக்கின்றி
முற்றிலும் பணிக்கு தயாரானவராக இருக்க வேண்டும் என்றே அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள். பணி
வாய்ப்பாளருடன் தகவல் பரிமாற வாய்ப்பு கிடைக்கும் போது உங்களை அவரிடம்
விற்பதற்கு உரிய அழுத்தமான விபரங்களை தவறாமல் எடுத்துக் கூறுங்கள்.
நம் எல்லோரிடமும் இருக்கும் நம்மை முன்னிறுத்தும்
விஷயங்களை நேர்காணல் முடிவதற்கு முன்னர் நமது பணி வாய்ப்பாளரிடம்
தெரிவித்து விட்டோமா என்பதை உறுதி செய்யுங்கள்.
இந்த பார்வை ஒரு தொடு திரைதான். இன்னமும் அறிந்து கொள்ள, அவற்றைப் புரிந்து கொள்ள நிறைய இருப்பதால் முழு முயற்சி செய்யுங்கள். உங்கள் வெற்றி நிச்சயமாக பக்கத்தில் தான் உள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...