நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் 94 குழந்தைகளின் உயிரை பலி
கொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பின் இன்று
தீர்ப்பு வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 21
பேரில், 11 பேரை விடுதலை செய்துள்ள தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம்,
மீதம் உள்ள 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது.
நெஞ்சை உலுக்கிய விபத்து:
கும்பகோணம் காசிராமன் தெருவில் அடுக்குமாடி கட்டிடத்தில் 3 பள்ளிகள்
இயங்கி வந்தன. ஸ்ரீ கிருஷ்ணா தனியார் உதவிபெறும் பள்ளி,சரஸ்வதி நர்சரி
மற்றும் ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய
பள்ளிகளில் சுமார் 700 குழந்தைகள் படித்து வந்தனர். குறுகிய தெருவில்
அமைந்திருந்த ஒரே கட்டிடத்தில் இயங்கி வந்த இப்பள்ளிகளில் போதிய பாதுகாப்பு
வசதிகள் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2004ம் ஆண்டு ஜூலை
16ம் தேதியன்று, பள்ளி கட்டிடத்தில் கீழ்தளத்தில் இயங்கி வந்த
உணவுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முதல் தளத்திற்கு பரவியது.
இதில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியாகின.மேலும் 200 குழந்தைகளுக்கும் மேல்
படுகாயம் அடைந்தனர்.சாட்சிகளிடம் விசாரணை : இந்த விபத்து தொடர்பாக பள்ளி நிறுவனர் பழச்சாமி, அவரது மனைவி, மகள் உள்ளிட்ட 24 பேர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர்களில் 3 பேரை தமிழக அரசு வழக்கில் இருந்து விடுவித்தது. இவ்வழக்கு தொடர்பாக சுமார் 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 501 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.பலியான குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட 230 பேர் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.இந்த தீவிபத்திற்கு பிறகு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் கல்வித்துறை அதிகாரி, நகராட்சி கமிஷ்னர் மற்றும் நகர திட்டக்குழு அதிகாரி ஆகியோர் விதிமுறைகளை பின்பற்றி முறையாக ஆய்வு செய்யாததே இந்த கொடூர விபத்திற்கு காரணம் என அரசு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற விசாரணையில், கல்வித்துறை அதிகாரிகள், நகராட்சி கமிஷ்னர், நகர திட்டக்குழு தலைவர் உள்ளிட்டோரையும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டது.தீர்ப்பு : பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளி தீ விபத்து வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமுமே இந்த விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.. இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. முதற்கட்ட தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்ட 11 பேரை கோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 10 பேரை குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...