சுமார் 200 ஆண்டுகளைக் கடந்த
ஓவியங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு, சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில்
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இந்தப் புத்தகத்தை வெளியிடும்
நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது:
உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தை முன்னிட்டு,
"ஒளித்திரையில் ஒரு ஓவியப் புத்தகம்' என்ற நூலை தொல்லியல் ஆய்வுத் துறை
வெளியிட்டுள்ளது. கடந்த 1816-ல் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் டேனியல்,
தாமஸ் டேனியல் ஆகியோர் இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களை ஓவியங்களாக
வரைந்தனர்.
இந்த ஓவியங்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு கோட்டை
அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றின் டிஜிட்டல் வடிவத்தை ஒளித்திரையில் ஒரு
ஓவியப் புத்தகம் என்ற நூலாக தொல்பொருள் ஆய்வுத் துறை வியாழக்கிழமை
வெளியிட்டது.
நூலை தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் லூர்து சாமி
வெளியிட வரலாற்று ஆய்வாளரான சுரேஷ் பெற்றுக் கொண்டார். கோட்டை
அருங்காட்சியகக் கட்டடம் அமைக்கப்பட்டு 375 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு
அஞ்சல் உறை வெளியிடப்பட்டது. இதனை வரலாற்று ஆய்வாளரான ஹேமச்சந்திர ராவ்
வெளியிட, வரலாற்று ஆய்வாளரான சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகக்
கட்டடம் 1790-இல் கட்டப்பட்டது. அதன்பின், அந்தக் கட்டடம் வர்த்தகக் கூடமாக
பயன்படுத்தப்பட்டது. பிறகு வங்கியாகவும், அதன்பின் ராணுவ அதிகாரிகளின்
உணவுக் கூடமாகவும் மாற்றப்பட்டது. சென்னையின் முதல் கலங்கரை விளக்கம்
இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் இயங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. 1948-ஆம்
ஆண்டு முதல் இக்கட்டடம் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள புனித மேரி தேவாலயம்,
இந்தியாவின் மிகப் பழைமையான தேவாலயங்களில் ஒன்று. இதில் 1680-ஆம் ஆண்டு
முதல் 1786-ஆம் ஆண்டு வரை எண்ணற்ற திருமணங்கள் நடந்துள்ளன. கிழக்கிந்திய
கம்பெனியின் காரணகர்த்தாவான ராபர்ட் கிளைவின் திருமணமும் இங்குதான்
நடைபெற்றது.
பிரிட்டனைச் சேர்ந்த எண்ணற்ற ஆங்கிலேயர்களின் பிறப்பு -
இறப்புப் பதிவுகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தங்களின்
மூதாதையர்களின் பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், இறப்புச்
சான்றிதழ் போன்றவற்றைத் தேடி இன்றும் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் நேரில் வந்த
வண்ணம் இருக்கிறார்கள். இவர்களுக்கென இந்தப் பதிவுகளை டிஜிட்டல் முறையில்
பாதுகாக்கும் நடவடிக்கையில் தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது.
கோட்டை அருங்காட்சியகத்தில் டச்சு, பிரெஞ்சு,
கிழக்கிந்திய கம்பெனி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களின் 3,000-க்கும் மேற்பட்ட
பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி
காலை 5.30 மணிக்கு இந்தியாவில் ஏற்றப்பட்ட 6 தேசியக் கொடிகளில் ஒரு கொடி
இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
12 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட அந்தக் கொடி
பட்டுத் துணியால் தைக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் பாதுகாக்கவும் நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இங்கு பாதுகாக்கப்பட்டு வரும் 40 வகையான
நாணயங்களை முப்பரிமாண முறையில் பார்வையாளர்கள் கண்டு மகிழவும் விரைவில்
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அகில இந்திய அளவில் 44 அருங்காட்சியகங்கள் மத்திய
அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் தஞ்சாவூர், வேலூர் ஆகிய
இடங்களில் காட்சிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றில், 1600-க்கும் மேற்பட்ட
சிலைகள் இருக்கக்கூடிய வேலூர் காட்சிக்கூடத்தை அருங்காட்சியகமாக தரம்
உயர்த்த மத்திய அரசுக்கு தொல்லியல் துறை சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு
உள்ளது என்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...