பி.யூ.சி., தேர்வு முடிவுகளால், பல மாணவர்களின் வாழ்க்கை,
கேள்விக்குறியாகி உள்ளதால், மாநில அரசு, சூழ்நிலையை சரி செய்ய முயற்சித்து
வருகிறது.
பி.யூ.சி., தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியான
போது, வெவ்வெறு விதமான மதிப்பெண் குளறுபடிகளும், தேர்ச்சி குளறுபடிகளும்
ஏற்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தொடர் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை 9:00 மணியிலிருந்தே, மாணவர்கள், பி.யூ.சி.,
போர்டு அலுவலகம் எதிரில் குவிந்து, கல்வித் துறை அமைச்சர் கிம்மனே
ரத்னாகர், போர்டு இயக்குனருக்கு எதிராக கோஷமிட்டனர்.
பெற்றோர் வலியுறுத்தல்:
ஏ.பி.வி.பி., - என்.எஸ்.யூ.ஐ., - சி.எஸ்.ஐ., உள்ளிட்ட மாணவர் அமைப்பு
தலைமையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாநிலத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மாணவர்கள், பி.யூ.சி.,
போர்டு அதிகாரிகள் மீது, கடும் அதிருப்தி தெரிவித்தனர். அரசு உடனடியாக,
இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,
மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்ட மாணவர்கள் கூறியதாவது:
வினாத்தாள் தயாரித்ததில் இருந்து, விடைத்தாள் திருத்தியது வரை, ஒவ்வொரு
கட்டத்திலும் தவறுகள் நடந்துள்ளது. 50 சதவீத மாணவர்களுக்கு, பி.யூ.சி.,
போர்டின் தவறால், அநியாயம் நடந்துள்ளது. வினாத்தாளை சரியாக தயாரிக்க
தெரியாதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைவிடமாட்டோம்:
திறமையான மாணவர்களும் கூட, மதிப்பீட்டில் ஏற்பட்ட தவறால், பாதிக்கப்பட்டு
உள்ளனர். மறுமதிப்பீடு செய்வதற்கு, அதிக கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதால்,
வெளியூர்களிலிருந்து வந்து விண்ணப்பம் தாக்கல் செய்ய, ஏழை மாணவர்களால்
முடியவில்லை. மறுதேர்வுக்கு தயாராவதா அல்லது, மறுமதிப்பீடு கோரி விண்ணப்பம்
தாக்கல் செய்வதா என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இலவசமாக, மறுமதிப்பீடு
செய்ய வேண்டும். தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டம் நடத்தியும், கல்வித்
துறை அமைச்சரோ, அதிகாரிகளோ எங்களை வந்து சந்திக்கவில்லை; பிரச்னைகளை
கேட்டறியவில்லை. எங்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் வரை, போராட்டத்தை
கைவிடமாட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். மாணவர்கள் போராட்டத்திற்கு,
போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர். பி.யூ.சி., போர்டு அலுவலக
நுழைவு வாயிலில், மாணவர்களை சோதனையிட்டு, அடையாள அட்டை இருப்பவர்கள்
மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
சி.இ.டி., முடிவு ஒத்தி வைப்பு:
பி.யூ.சி., தேர்வு முடிவில் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், வரும்
26ம் தேதி அறிவிக்கப்படவிருந்த, சி.இ.டி., முடிவை, கர்நாடகா தேர்வாணையம்
தள்ளிவைத்துள்ளது.
நான்கு நாட்களுக்கு பின்...:
கடந்த நான்கு நாட்களாக, மவுனமாக இருந்த கல்வித் துறை அமைச்சர் கிம்மனே
ரத்னாகர், ஷிவமோகா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் நடக்கவிருந்த அதிகாரிகளுடனான
கூட்டத்தை, பொதுமக்கள் நெருக்கடிக்கு பணிந்து, ரத்து செய்து விட்டு,
பெங்களூருவுக்கு வருகை தந்தார். விதான் சவுதாவில், கல்வித் துறை அமைச்சர்
கிம்மனே ரத்னாகர், அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். மறுமதிப்பீட்டின்
போது, சில நிபந்தனைகளை அமைச்சர் விதித்ததை, மாணவர்கள் ஏற்கவில்லை.
யாரெல்லாம் பலிகடா?
கல்வித் துறை கமிஷனர் முஹம்மது மொஹிஷினை, சிறு தொழில் துறை நிர்வாக
அதிகாரியாக, அரசு இடமாற்றம் செய்துள்ளது. இதற்கிடையில், பி.யூ.சி., போர்டு
இயக்குனர் சுஷ்மா கோடு போலேவை, இடமாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தல்
எழுந்துள்ளது. மேலும், பல அதிகாரிகளின் பதவி பறிபோகலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...