நல்லா படிக்கணுமா? அப்போ இதைப் படிங்க..!
‘படிக்கணும். எல்லாத்தையும் படிக்கணும்; எல்லா யூனிட்டையும்,
ஒரு டாபிக் விடாம படிக்கணும்; ஆனா, எக்ஸாமுக்கு முந்துன நாள் மட்டும் படிக்கணும்; அதுக்கு
என்ன பண்ணலாம்’னு நம்ம
ஃப்ரண்ட்ஸ்கிட்ட அறிவுரை கேட்க, அதுக்கு அவன் ‘நீ இண்டெக்ஸ் பேஜ்தான் படிக்கணும்'னு
கிண்டல் பண்ணுவான். இது தேர்வுக்கு முந்தைய நாள்களில் நடக்கும் வழக்கமான உரையாடல்.
தேர்வு நெருங்க நெருங்க உள்ளுக்குள் இனம்புரியாத பயம் ஏற்படுகிறதா? உங்களுக்குத்தான்
என்னதான் பரிட்சைக்கு முந்தினநாள் படிக்கணும்னு நினைச்சாலும்
இந்த ஃபேஸ்புக்கும் வாட்ஸப்பும் நம்மை சும்மா விடாது. ‘நீ போகும் இடமெல்லாம் நானும்
வருவேன்’னு கூடவே
வரும். அதையும் தாண்டி உட்கார்ந்தா, எங்கயோ கேட்குற பாட்டு, கிச்சன்ல இருந்து வர்ற
வாசம் உங்க நாடி நரம்பை எல்லாம் சுண்டி இழுக்கும். இல்லையா? அப்போ, உங்களுக்கு கவனச்சிதறல்
இருக்கு. இதனால, அமெரிக்காவுல 2005-ல் பல பில்லியன் டாலர் நஷ்டமாயிடுச்சாம். அடடா!
‘இது என்னடா... புது வியாதி’ன்னு நினைக்கிறீங்களா? உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ். இந்த நோயைக் குணப்படுத்தி உங்க வேலையை சரியாகச்
செய்வதற்கான வழிமுறைகள். இதோ...
1. லிஸ்ட் போட்டு வேலை பாக்கணும்:
லிஸ்ட் போட இதென்ன மளிகைக்கடை பொருளான்னு நீங்க கேக்குறது புரியுது.
இதுவும் கிட்டத்தட்ட அப்படித்தான் நண்பா. இந்த
விஷயத்தை இந்த டைம்ல பண்ணி முடிக்கணும்னு நோட் பண்ணி வச்சுக்கணும். அப்டி நோட் பண்ணுனா,
சரி ஆகிடுமா? உடனே ஆகாது. இந்த மாதிரி நோட் பண்ணி வைக்கிறப்போ, நாம எவ்ளோ வொர்க் பண்ணாம விட்டு இருக்கோம்னு நமக்கு
தெரியும். அப்போ நமக்குள்ளயே ஒரு பயம் வரும். அந்த பயம் எப்படியோ அடுத்த தடவை அந்த
வேலையை முடிக்க வச்சுடும்.
2. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்க :
எப்படி படிக்கிறோம் என்பது மட்டும் அல்ல, எங்கே படிக்கிறோம் என்பதும்
முக்கியம். படிக்கிறவன் எங்க இருந்தாலும் படிப்பான்னு சொல்வாங்க. அதெல்லாம் படிக்கிற
பையனுக்கு. நமக்கு? அதுக்குத்தான் சரியான விடையைத் தேர்ந்தெடு மாதிரி, சரியான இடத்தை
தேர்ந்தெடுக்கணும். முதல்ல நம்மல சுத்தி டிவி, செல்போன், கம்யூட்டர், கதை புத்தகம்
போன்ற அபாயகரமான பொருட்கள் இருக்கான்னு பார்க்கணும். அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்க.
தீவிரமா வாசிக்கும்போது சின்னச்சின்ன சத்தம் கூட கடுப்பு ஏத்தும், அதுனால கொஞ்சம் வாய்விட்டு
படிச்சா அந்த சத்தமெல்லாம் கேட்காது. மைண்டும் வேற எங்கும் போகாது.
3. எலக்ட்ரானிக் பொருட்களை கொஞ்ச நேரம் மறந்துடுங்களேன் :
‘இது என்ன புதுசா இருக்கு’னு யோசிக்காதீங்க ப்ரோ. வீட்ல எப்பவும்
திட்டுவாங்களே... ‘எருமை எப்ப பார்த்தாலும் போனையும் லேப்டாப்பையும் பார்த்துட்டே இருக்கு.
வேற எந்த வேலையும் பாக்க மாட்டேங்குது'ன்னு ( என்னை எப்பவும் இப்டிதான் திட்டுவாங்க).
அதுதான் எலக்ட்ரானிக் டிவைஸ் இந்த டிவி, போன், சிஸ்டம் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி வச்சிடணும்.
ஏன்னா... நம்ம படிக்கணும்னு நினைச்சு புக்கை எடுத்தாலும், நம்ம தளபதிகள் போன் பண்ணி,
'மச்சான் எவ்ளோ படிச்சிருக்க? நான் இவ்ளோதாண்டா முடிச்சிருக்கேன்'னு நம்மள ‘டிஸ்டர்ப்’ பண்ணிடுவாங்க,
ஸோ... அதுக்கு முன்னாடியே போனை ஆஃப் பண்ணி வச்சிடுறது நல்லது. என்னைக்கும் இல்லாம
அன்னைக்குத்தான் டிவி-ல நல்ல ‘ப்ரோகிராம்’ போடுவாங்க. நல்ல புது கேம் லேப்டாப்ல ஏத்தி
வச்சு இருப்போம். அதைக் கொஞ்ச நேரம் பார்த்துட்டு படிக்கலாம்னு அடம்பிடிக்கிற மனசையும்
இந்த எலக்ட்ரானிக் பொருள்களையும் நாம ஆஃப்
பண்ணி வச்சு, அதை மறந்துடணும்.
4. தேவையான பொருட்கள் :
தேவையான பாடபுத்தகங்கள், பேனா, பென்சில், குறிப்பு எடுக்க நோட்டுகள்
போன்றவற்றை முன்னரே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன்னா... படிக்க ஆரம்பிச்ச அப்புறம் அடுத்து
அடுத்து படிக்க வேண்டிய புக் நோட்ஸ் எல்லாம், முன்னாடியே இருந்தாதான் சரியா படிக்க
முடியும். இல்லைன்னா, அடுத்து படிக்க நினைக்கிற புத்தகத்தை நாம தேடணும். அப்படி தேடும்போது
அது கிடைக்காம போச்சுனா, டென்ஷ்ன் ஏறும். எல்லாம்
மறந்துடும்.
5. விண்டோஸ்ஸை க்ளோஸ் பண்ணனும் :
இது நம்ம வீட்டுல இருக்க விண்டோஸ் இல்லை. நம்ம ப்ரவுசர்ல விண்டோஸ். நீங்க நினைக்கலாம்...
அதான் எலக்ட்ரானிக் டிவைஸ் எல்லாம் ஆஃப் பண்ண சொல்லியாச்சே... ஏன்னா நம்ம பயலுவ என்னைக்கும் இல்லாம இன்னைக்குத்தான்
ஏதும் டவுட்டு வந்தா, கூகுள்ல செக் பண்ணலாம்னு நினைப்பான். ஆனா கூகுள் போனா, நாம மறுபடியும்
உலகத்தை நோக்கிய பயணத்துக்காக எல்லாத்தையும் (கண்டிப்பாக விளையாட்டு, சமூக வலைதளம்
அப்போ ட்ரெண்டிங்ல இருக்க விஷயங்கள் ரொம்ப ஈர்க்கும்) தேட ஆரம்பிப்போம். அதனால வீட்டில்
இருக்கும் விண்டோவையும் சிஸ்டத்தில் இருக்கும் விண்டோஸ்சையும் அணைத்துவிடுங்கள்.
6. ரிமைண்டர் செட் பண்ணுங்க :
ஒரு வேலை செய்யும்போது நேரம் போகிறதே தெரியாது. அதே மாதிரிதான்
படிக்கும்போதும் ஒரே கேள்வியைப் படிச்சுகிட்டே இருப்போம். நம்ம படிக்க ஆரம்பிச்ச அப்புறம்,
நேரம் ரொம்ப போயிருக்கும். அதுனால மத்த கேள்வியெல்லாம் படிக்க முடியாது ( நாம படிக்கறதே
ரெண்டு கேள்வியோ மூணு கேள்வியோ அதுல எந்த குறையும் வந்துடக்கூடாதுல) அதனால அலாரம் கடிகாரத்துல
இந்த வேலையை, இந்த நேரத்துல முடிக்கணும்னு செட் பண்ணிக்கோங்க.
7. முடியாதுன்னு எதுவும் கிடையாது :
அனைத்து தடைகளையும் நாம தாண்டி படிக்கும் போதும், நமக்கு சில
விஷயங்கள், பாடங்கள் புரியாமா போகும். அச்சோ! இதைப் படிக்க முடியாதோன்னு நமக்கு தோணலாம்.
இது அவ்ளோதான் நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்னு தோணும். அதெல்லாம் சும்மா... நம்ம
மனவிஸ்கி. படிச்சதையே திருப்பித்திருப்பி நாலு தடவை படிச்சுப் பார்த்தா கண்டிப்பா
‘இன்ஜினியரிங்ல இருக்கிற எம்- 3’ பேப்பரே புரிஞ்சுடும். மத்த சப்ஜெக்ட் புரியாதா என்ன?
நம்மளால முடியாதது ஒன்னும் இல்லைனு நினைச்சுட்டு படிக்கணும்..
8. அதிகமாக படிக்க, அளவாக படிங்க :
இது
என்ன புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா? நாம நிறைய படிக்கணும் அப்போதான் மேக்சிமம் எழுத முடியும். அதுக்கு படிக்சுட்டே இருந்தா எக்ஸாம் ஹால்ல எந்த கேள்விக்கு எந்த விடைன்னு தெரியாம போய்டும். சராசரியா 45 - 50 நிமிஷம் வரைக்கும்தான் ஒரு மனிதனோட கவனிக்கும் திறன் இருக்கும். ( அதனாலதான் வகுப்புகள் எல்லாம் 45 - 50 நிமிஷம் வெச்சிருக்காங்க) அதுக்குமேல ஒரே விஷயத்தை கவனிக்க முடியாது. ஸோ... படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை ஒரு 5 நிமிஷம் ரிலாக்ஸ் ப்ளீஸ். ( வாக்கிங் இல்ல... அமைதியா உக்கார்ந்து இருக்கணும் அதைவிட்டுட்டு வாட்ஸப் மெசெஞ்சர்லாம் செக் பண்ணக்கூடாது)..
9. இலக்கைத் தீர்மானியுங்கள் :
நம்முடைய குறிக்கோள் என்ன? எதுக்காக படிக்கிறோம்? இப்படி... உங்களைப் பத்தி நீங்க யோசிக்கணும்னு சிந்தனை சிற்பி வால்டேர் சொல்கிறார் "உலகத்திலே மிக கடினமான விஷயம் உன்னையே நீ அறிந்து கொள்வது தான்". சரி... அதை எப்படி தெரிஞ்சுக்கிறது? கண்ணை மூடி உட்கார்ந்து நாம எங்க இருந்து வந்தோம்? நாம இவ்ளோ தூரம் வந்து, எப்படி கடந்து வந்தோம்? அப்படி இப்படினு கொஞ்சம் எல்லாத்தையும் யோசிக்கணும் (இதைத்தான் தியானம்னு சொல்வாங்க).
10. முக்கியமான விஷயம் :
இப்போதான் நாம இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கோம். முக்கியமான விஷயம் என்னன்னா? மேல இருக்க டிப்ஸையெல்லாம் எப்படி படிச்சீங்களோ அதே மாதிரி ஃபாலோ பண்ணணும். உங்களுக்குத் தெரிந்த குணப்படுத்தும் வழிகளை கமென்ட்டில் கொடுக்கவும்.
- ச.செந்தமிழ் செல்வன்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...