தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பால்வளத்
துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்
திங்கள்கிழமை நடைபெற்றது.
அதில்,
துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:ஆவின் பால் உற்பத்தி கடந்த நான்கரை
ஆண்டுகளில் நாளொன்றுக்கு சுமார் 9 லட்சம் லிட்டர் உயர்ந்து இப்போது 30
லட்சம் லிட்டர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதேபோன்று, பால் விற்பனையும்
சுமார் 2 லட்சம் லிட்டர் உயர்ந்து இருக்கிறது. சென்னை மாநகர விற்பனை
நாளொன்றுக்கு 11.5 லட்சம் லிட்டர் என்ற இலக்கினை எட்டியுள்ளது. ஆவின்
வணிகச் சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் 700 ஆவின் விற்பனை
நிலையங்களுக்கு பெயர்ப் பலகை அளிக்கப்பட்டுள்ளது. 32 பள்ளி-கல்லூரிகளில்
ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
68 பள்ளி கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அசோக் பில்லர், வண்ணாந்துறை, பெசன்ட்,
பாலவாக்கம் ஆகிய இடங்களில் ஆவின் அதிநவீன பாலகம் அடுத்த மாதம்
தொடங்கப்படும் என்றார் அவர். இந்த ஆய்வுக் கூட்டத்தில்,
கால்நடை-பால்வளம்-மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், ஆவின் நிர்வாக
இயக்குநர் சுனில் பாலீவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.