கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக
உள்ள உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் குறித்த பட்டியல் வெளியான
நிலையில், திடீரென கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கே
பணி என்ற புதிய நிபந்தனை காரணமாகத் தேர்வர்கள் மத்தியில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள
3,589 உதவியாளர் பணிகளுக்கு கடந்த 2012 டிசம்பரில் எழுத்துத் தேர்வு
நடைபெற்றது.
இதனிடையே, 2014 செப்டம்பரில் மாவட்டத் தலைநகரங்களில்
நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து, எழுத்துத் தேர்வு, நேர்முகத்
தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம் 2015 பிப்ரவரியில்
வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், வகுப்புவாரி
சுழற்சிமுறையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும்,
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்ட மாவட்டம், கூட்டுறவுச் சங்கங்கள் குறித்த தகவல்கள் மாநில ஆள்
சேர்ப்பு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனிடையே, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கான உத்தரவில்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புப் படித்தவர்களுக்கு மட்டுமே பணி
ஒதுக்கப்படும் என புதியதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலிப்
பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணையின்போது, ஏதேனும்
ஒரு பட்டம் பெற்றிருந்தால்போதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த
நிலையில், தற்போது திடீரென கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு
படித்தவர்களுக்கு மட்டுமே பணி ஒதுக்கப்படும் என்ற புதிய நிபந்தனை
தேர்வானவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக உதவியாளர் பணிக்குத் தேர்வான ஒருவர்
கூறியது: கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு
எழுத்துத் தேர்வு 2012-இல் நடைபெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு
தேர்வானவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஆனால், தேர்வர்களுக்கு
அதிர்ச்சி அளிக்கும் வகையில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு
முடித்தவர்களுக்கு மட்டும் பணி ஒதுக்கீடு செய்யப்படும் எனப் புதிதாக
நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காலிப் பணிக்கு விண்ணப்பம் செய்தபோது ஏதேனும்
ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது எனக் கூறிவிட்டு தேர்வு முடிவு
வெளியிடும்போது திடீரென கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு
படித்தவர்களுக்கே பணி என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த புதிய
நிபந்தனையால் சந்தேகம் எழுகிறது.
இதிலும், குறிப்பாக கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு படித்தவர்கள் குறைவான அளவிலேயே உள்ளனர்.
ஆனால், இதர பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள்
ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு தரப்படுமா, இல்லையா என்பது
கேள்விக்குறியாக உள்ளது. எனவே, அரசுத் தரப்பில் புதிய நிபந்தனை தொடர்பாக
விளக்கம் அளித்து பட்டப் படிப்பு முடித்த தேர்வர்களுக்கும் பணி வழங்க
வேண்டும் என்றார் அவர்.








