தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை
விபத்துகளில் 45 சதவிகிதம் மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும்
உயிரிழப்புகள்தான். இதில், 90 சதவிகிதம் ஹெல்மெட் அணியாததால்
நிகழ்ந்துள்ளன. உயிரிழப்புகளைத் தடுக்கவே ஹெல்மெட் அணிவது
கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. 1989-ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம்
பிரிவு 129-ன் படி இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிவது
கட்டாயமாகும்.
ஹெல்மெட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம்
ஓட்டும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டியது, நமக்கு விபத்து ஏற்பட்டால் நம்
குடும்பத்தினர் நிலை என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம்
உயிருக்கு உயிராக நேசிப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை யோசிக்க
வேண்டும். 'என் குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் என் கையில்' என்பதை
உணர்பவர் எவரும், ஹெல்மெட் அணியாமல் இருக்க மாட்டார்.
ஹெல்மெட் எதில் தயாரிக்கப்படுகிறது?
தடிமனான, கடினமான மேல் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக்
கலவையால் செய்யப்படுகிறது. இது, கடினமான பொருளின் மீது தலை மோதும்போது அதன்
வேகத்தையும், அதன் தீவிரத்தையும் குறைக்கும். இந்தக் கடினப் பகுதிக்கு
அடுத்தபடியாக, பாலியஸ்டரினால் செய்யப்பட்ட அடுக்கு ஒன்று காணப்படும். இது,
குறைக்கப்பட்ட வேகத்தை தன்னுள் உறிஞ்சிக்கொள்ளும். இந்த பாலியஸ்டரின்
அடுக்கு ஃபேப்ரிக் துணியால் மூடப்பட்டிருக்கும். இதற்கு அடுத்தபடியாக
பார்வைக்கும், தூசுகள் கண்களில் விழாமல் இருப்பதற்குமான வைஸர் (கண்ணாடி)
பொருத்தப்பட்டிருக்கும். பாலிகார்பனேட், பாலியஸ்டரின், ஃபேப்ரிக், வைஸர் என
இவை அனைத்தும் சேர்ந்ததுதான் முழுமையான ஹெல்மெட்!
விலை குறைந்த ஹெல்மெட் அணியலாமா?
போலி ஹெல்மெட் அணிந்தால், விபத்தில் இருந்து தப்பிக்க முடியாது. மாறாக,
இது ஏற்படுத்தும் பிரச்னைகள்தான் அதிகம். போலி ஹெல்மெட் தலையின் முக்கியமான
இடங்களில் இறுக்கத்தை ஏற்படுத்தி தலைவலி, கழுத்து வலி போன்ற பல்வேறு
உபாதைகளுக்கு வழி வகுக்கும்.
பாதுகாப்பான ஹெல்மெட் எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது?
ஐ.எஸ்.ஐ. முத்திரை இடப்பட்ட ஹெல்மெட் வாங்குவதே சிறந்தது. இந்தியத்
தரக்கட்டுப்பாட்டு வாரியம் பூனாவில் உள்ள ARAI ஆய்வுக் கூடத்தில்
ஹெல்மெட்களைச் சோதித்த பிறகு அதற்கு ஐஎஸ்ஐ. முத்திரை வழங்குகிறது. இந்த
ஐஎஸ்ஐ. முத்திரையை ஹெல்மெட் தயாரிக்கப்படும் மூலப்பொருள், எடை மற்றும் தரம்
ஆகியவற்றைப் பரிசோதித்த பிறகுதான் வழங்குகிறது.
தரமான ஹெல்மெட் அணிந்தும் தலைவலி, கழுத்துவலி வருகிறதே ஏன்?
உங்களுடைய தலைக்குச் சரியாகப் பொருந்துகிற ஹெல்மெட்டாகப் பார்த்து வாங்க
வேண்டும். தலையுடன் நல்ல இறுக்கமாகவும் அதே சமயம் வசதியாகவும் இருக்கிறதா
என்றும் பார்க்க வேண்டும். ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை கீழ்ப் பக்கமாகப்
பிடித்துக்கொண்டுதான் ஹெல்மெட்டைத் தலையில் அணிய வேண்டும். கன்னத்தைத்
தொடும்படியாக இருக்கும். பேட் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதே நல்லது. பின்னர்,
ஸ்ட்ராப்பை போட்டுவிட்டு ஹெல்மெட் அணிந்து பாருங்கள். தலையை ஆட்டும்போது
ஹெல்மெட் ஆடாமலோ அல்லது அதிக இறுக்கமாகவோ இருந்தால், அது உங்கள் தலைக்கு
ஏற்ற ஹெல்மெட் இல்லை என்று அர்த்தம். உங்கள் தலைக்கு ஏற்ற ஹெல்மெட்டாகப்
பார்த்து வாங்கினால், வலி எதுவும் இருக்காது. இதை முதன்முறையாக
அணிபவர்களுக்கு கழுத்து வலி கொஞ்சம் இருக்கும். இது போகப் போக
சரியாகிவிடும். ஆனால், வலி அதிகமானால் எடை குறைவான ஹெல்மெட்டைப்
பயன்படுத்துவது நல்லது.
வண்ணமயமாக ஹெல்மெட்கள் விற்கப்படுகிறதே, அதைப் பயன்படுத்தலாமா?
எந்த நிறமும் இல்லாமல் இருக்கும் ஹெல்மெட்களை விடவும் கலர் ஃபுல்லான
ஹெல்மெட்களை வாங்குவது நல்லதுதான். ஏனென்றால், குறிப்பாக 'ரிஃப்ளெக்ட்'
ஆகக்கூடிய நிறங்களுடைய ஹெல்மெட்களைப் பயன்படுத்தும்போது, இரவு நேரங்களில்
தூரத்தில் உள்ளவை பளிச்செனத் தெரியும்.
ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும், தலைவலிக்கும், கழுத்து வலிக்கும் என்று கூறுகிறார்களே?
இவை அனைத்தும் பொய்ப் பிரசாரங்கள். ஹெல்மெட்டுக்கும் முடி கொட்டுவதற்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லை. பல வருடங்களாக ஹெல்மெட் அணிந்துகொண்டு வண்டி
ஓட்டுபவர்கள் யாரும் முடி உதிர்வதாகவோ, கழுத்து வலிப்பதாகவோ புகார்
கூறவில்லை.
ஹெல்மெட் அணிவதால், சாலையில் செல்லும் மற்ற
வாகனங்களின் சத்தம் சரியாகக் கேட்பது இல்லை; தலை வியர்வையில் ஊறி உடல்நலக்
குறைவு ஏற்படுகிறது என்று கூறுகிறார்களே?
இயர் போன் மாட்டிக்கொண்டு
சென்றாலும் சத்தம் எதுவும் கேட்காது. மேலும், சத்தம் கேட்பதில் குறைபாடு
கொண்டவர்கள் என்றால், அதற்கென விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்
சந்தையில் கிடைக்கிறது. இரு காது பகுதியிலும் வென்ட் அமைப்புக்கொண்டது அது.
அதேபோல், தலை வியர்வையில் ஊறிவிடுகிறது என்பவர்கள், ஏர் வென்ட் வைத்த
ஹெல்மெட் வாங்கி அணியலாம். உங்கள் செளகரியத்துக்கு ஏற்ற வகையில்.அணிந்து
கொள்ளலாம்.நன்றி tnptf mani







