திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 2,270 ஆசிரியர்கள்
பணிநியமனங்களுக்கு, பல்கலைக்கழகத்திடமிருந்து முறையான ஒப்புதல்
பெறப்படவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு
(யு.ஜி.சி.) தெரிவித்தது.
இதுதொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
திருவள்ளுவர்
பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும்
5,000 ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கினர்தான் பல்கலைக்கழக மானியக்
குழுவின் விதிமுறைகளின்படி தகுதி பெற்றுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு
அக்டோபர் 9-ஆம் தேதி ஆசிரியர்களின் தகுதி தொடர்பாக யு.ஜி.சி-யின்
விதிமுறைகளுக்கு எதிராக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தீர்மானம் ஒன்றை
நிறைவேற்றியது. எனவே, அந்தத் தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்
என கோரப்பட்டது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
எஸ்.கே.கெüல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்
விசாரணைக்கு வந்தது.
அப்போது, பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் பதில்
மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின்
கீழ் இயங்கும் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் 4,240
ஆசிரியர்களில், 1,970 ஆசிரியர்களுக்கு மட்டுமே யு.ஜி.சி-யின்
விதிமுறைப்படி, பல்கலைக்கழகத்திடமிருந்து அவர்கள் பணிபுரிவதற்கான ஒப்புதலை
கல்லூரிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள 2,270 ஆசிரியர்கள் பணிபுரிவதற்கான முறையான
ஒப்புதலை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திடமிருந்து பெறவில்லை என
தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீதிபதிகள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு 2 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது
என்று கூறி வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.