அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு
பயிற்சிக்கான நுழைவுத் தேர்வுக்கு இளைஞர்களிடம் இருந்து மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு சென்னை பயிற்சி
மையத்தில், முதல் நிலை தேர்வு பயிற்சி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
நவ.22ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம்
வழங்கப்பட இருக்கிறது.
இதற்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதாவது ஒரு
பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் தொழிற் பட்டப்படிப்புகளை முடித்து
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் குறைந்தபட்ச வயது 21 வயதாகவும்,
அதிகபட்சமாக 32 வயதாகவும் இருக்க வேண்டும். மேலும், ஆதிதிராவிடர்,
அருந்ததியினர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும்,
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்
முஸ்லீம் வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10
ஆண்டுகளும் உச்ச வயது வரம்பிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சேர தகுதியுடையவர்கள்
ஆவார்கள்.
இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 6ம் தேதி முதல் மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகங்களில்
விநியோகம் செய்யப்படவுள்ளது. இளைஞர்கள் தங்களது, தகுதி, வயது மற்றும்
சாதிச் சான்றுகளை அளித்து விண்ணப்பங்களை விலையில்லாமல் பெற்று கொள்ளலாம்.
அதேபோல், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிற அக்.6ம் தேதிக்குள்
மேற்குறிப்பிட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக கிடைக்கும் படி
அனுப்பி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








