இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
வானொலி உரை
பிரதமர் மோடி பதவி ஏற்றது முதல் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை
‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’(மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில்
உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில்
அளிக்கிறார்.
இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
அப்போது மோடி கூறியதாவது:–
புதியன தொடங்குவோம்
வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, உற்சாகம்,
வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் ஆண்டாக இருக்கட்டும். தீவிரவாதம், பூமி
வெப்பமயமாதல், இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை
பேரிழிவுகள் இல்லாத ஆண்டாகவும் அமையட்டும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்
சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ‘இந்தியாவில்
புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட்
அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தற்போது செயல்வடிவம்
பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 16–ந்தேதி இத்திட்டத்தை மத்திய அரசு முழு
உத்வேகத்துடன் தொடங்கும்.
சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
புதுமை சிந்தனைகள்
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரும் புதுமை
சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளை புதியன தொடங்குவோம்
திட்டத்தில் பெற இயலும். உற்பத்தி துறை, சேவைத்துறை அல்லது விவசாயத்துறை என
எந்த துறையில் வேண்டும் என்றாலும் அவற்றில் புதிய சிந்தனைகளும், புதிய
வழிகாட்டுதல்களும், புத்தாக்கமும் இருக்கவேண்டும். ஏனெனில் புதுமை
சிந்தனைகள் இல்லாமல் இந்த உலகம் முன்னேற முடியாது.
அனைத்து மாநில
அரசுகளும் இத்திட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு போய்
சேர்க்கவேண்டும். இந்த திட்டம் நகரப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்
அல்ல. திறமையை வெளிக்காட்டும் அனைத்து பகுதி இளைஞர்களுக்கு உரியதாகவும்
இருக்கும்.
இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைக்கப்படும்.
புதிய
தொழில்கள் தொடங்குவது, தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவது, வேலை வாய்ப்பை
உருவாக்குவது ஆகியவற்றில் வங்கி கடன் அளிப்பதையும் இத்திட்டம் லட்சியமாக
கொண்டு உள்ளது. ஜனவரி 16–ம் தேதியன்று இது தொடர்பான விரிவான பிரசாரத்தை
உங்கள் முன்பாக வைப்பேன்.
கின்னஸ் சாதனை
சமையல் வாயுவுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டத்தின் மூலம்
இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். இத்திட்டம்
கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து உள்ளது. தற்போது நாட்டில் 35
முதல் 40 சதவீத மக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை மத்திய அரசின் வங்கிக்
கணக்குகள் மூலம் பெறுகின்றனர். இதுவரை ரூ.40 ஆயிரம் கோடி இந்த வங்கி
கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
வேற்றுமையில்
ஒற்றுமை காணும் நமது நாடு அடுத்தடுத்து பண்டிகைகளை கொண்டாடுகிறது. ஒரு
பண்டிகை வந்து போகும் நேரத்தில் அடுத்த பண்டிகை வந்துவிடுகிறது. சில
நேரங்களில் இந்த பண்டிகைகள் பொருளாதாரம் சார்ந்ததாகவும் காணப்படுகிறது.
ஏனெனில் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் ஏழைகளை நோக்கிய பொருளாதார
நடவடிக்கையாக இருக்கின்றன.
கருத்துகள் வரவேற்பு
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழாவையொட்டி, சத்தீஷ்கார்
மாநிலம் ராய்ப்பூரில் வருகிற 12–ந்தேதி முதல் 16–ந்தேதி முடிய தேசிய இளைஞர்
தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை ‘நரேந்திரமோடி மொபைல் அப்’ மூலம்
தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.