தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் மற்றும்
அதற்கு அளிக்கப்பட்ட பதில்கள் குறித்த விபரங்களை, ஆன்லைனில் வெளியிடுமாறு,
அனைத்து அரசுத் துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.டி.ஐ.,
எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், பொதுமக்கள் அரசுத் துறை
செயல்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு,
குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் என்ற விதி அமலில்
உள்ளது. எனினும், சில அரசுத் துறை அதிகாரிகள், ஆர்.டி.ஐ.,
மூலம்கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில்
அளிக்கப்பட்ட விளக்கங்கள் குறித்த தகவல்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய
வேண்டும். எனினும், ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெறுபவர் மற்றும்
பெறப்படுபவரின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடக் கூடாது. அனைத்து மத்திய
அரசுத் துறைகளும் இதை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.