ஆய்வக உதவியாளருக்கு பணி நியமன உத்தரவு: முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
ஆய்வக உதவியாளர் பணியிட நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப 5-க்கு ஒன்று என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியல் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், நடைமுறையில் உள்ள இனசுழற்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தகுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டு தெரிவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டோருக்கு உரிய பணி நியமன உத்தரவு வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் அரியலூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 21 மாவட்டங்களில் 2 ஆயிரத்து 444 பேருக்கு வழங்கப்பட்டது.
மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 678 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேர்வு செய்யப்பட்டவர்களில் ஆறு பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன், பள்ளி கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








