அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி
பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ம் தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க
உள்ளதாக தெரிவித்துள்ளது.
சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர்
எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம்
குறித்தும் பேசினார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு பணியை
செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும்,
ஆசிரியர்களின் ஊதியத்தை பொறியியல் பட்டதாரிகளின் ஊதியத்துடன் ஒப்பிட்டுக்
காட்டி பேசியுள்ளார்.
இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித்
தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான
ஜாக்டோ-ஜியோ இதுகுறித்து தங்களின் நிலையை வெளிப்படுத்த 4ம் தேதி
ஜாக்டோ-ஜியோ கூட்டம் கூடி முதல்வரின் பேச்சுக்கு முறையான விளக்கம் மற்றும்
பதிலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.







