தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு புதிய
வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர்
பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ளார்.
புதிய நெறிமுறைகள்: மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், ஆசிரியர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு விருதுகள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தம் 330 விருதுகள், சுயநிதி,
மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 பேர்,
ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத்துறை பள்ளி
ஆசிரியர்களுக்குத் தலா 2 விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் முறையாக
பார்வையற்ற 3 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக
369 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
ஆய்வு அலுவலர்கள் பள்ளிப் பார்வையின்போது கண்டறிந்த சிறந்த ஆசிரியர்களை
மாவட்ட தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். முதன்மைக்
கல்வி அலுவலர் தலைமையிலான குழு விண்ணப்பித்தவர்கள் பணிபுரியும்
பள்ளிகளுக்குச் சென்று அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைமையாசிரியர்கள் 20 ஆண்டுகள், ஆசிரியர்கள்,
சிறப்பு ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
குற்றச்சாட்டுகளுக்கு உட்படாதவராக... பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள்
எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராக
இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள்
கண்டிப்பாக பரிந்துரைக்கப்படக் கூடாது. கல்வியை வணிக ரீதியாகக் கருதி
செயல்படும் ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும்
ஆசிரியர்களையும் விருதுக்குத் தகுதியற்றவர்களாகக் கருத வேண்டும். மாவட்டத்
தேர்வுக் குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை
கருத்துருக்களை மாநிலத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு வரும் 14-ஆம்
தேதிக்குள் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
மாநிலத் தேர்வுக்குழு மாவட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இறுதிப் பட்டியலை தயார் செய்ய வேண்டும்








