நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 18-ம் தேதி தமிழகம் முழுவதும் வேலூர் நீங்கலாக
ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்களித்ததன் அடையாளமாக
வாக்காளர்களுக்கு விரல்களில் நீல நிறத்தில் நீண்ட நாள்களுக்கு அழியாத மை
வைக்கப்படுகிறது
இதற்காக 2.50 கோடி செலவில் கர்நாடக மாநிலம்
மைசூரிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மை பாட்டில்கள் வாங்கப்பட்டு,
10 மில்லி அளவுகொண்ட இரண்டு பாட்டில்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும்
வழங்கப்பட்டது.
நீலகிரி தொகுதியில் தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் என சுமார் ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு நான்கு பணியாளர்களும், 1,100
வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் 5 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் `போல் 2' எனும் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களே வாக்காளர்களுக்கு
ஆள்காட்டி விரல் நகத்தில் அழியாத மையை வைக்க வேண்டும்.
ஒரு
நாள் முழுக்க காலை முதல் மாலை வரை தொடர்ந்து இந்த மையைப் பயன்படுத்திவந்த
பணியாளர்களுக்கு கைகளில் மை பட்டதில் விரல்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிலருக்கு கைகளில் தோல் பெயர்ந்து புண் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே
இந்தமுறை நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளைப்
பெற்றுவிட்டு வீட்டுக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது எனவும்,
பயிற்சி வகுப்பு உட்பட மொத்தம் 5 நாள்களுக்குச் சேர்த்து மொத்தம் 1,300
மட்டுமே வழங்கினார்கள் எனத் தேர்தல் ஆணையத்தின் மீது கடுப்பில் இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வாக்காளர்களுக்கு பயன்படுத்தப்பட்ட மையால் கை
விரல்களில் புண் ஏற்பட்டுள்ளது மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என வேதனை
தெரிவிக்கின்றனர்.