130 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் நாட்டில் பிறந்த செல்மன் வாக்ஸ்மென் என்ற சிறுவன் அன்று கவலையாய் இருந்தான். அவனுடைய மூன்று வயது தங்கை மிரியம் திடீரென்று நோய்வாய்ப்பட்டதுதான் காரணம்.
அவளை அழைத்துச் சென்று பண்ணை வளர்ப்புப் பிராணிகளான ஆடு, மாடு, கோழி, வாத்து போன்றவற்றை வேடிக்கை காட்டுவது... அவள் கேட்கும் மலர்களை பறித்துக் கொடுப்பது... தங்கையுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது என்று சிறுவன் வாக்ஸ்மெனின் மொத்த அர்த்தமாக தங்கை மிரியம் இருந்தாள்.
அப்பா, அம்மா, அத்தைகள் இருந்தாலும், மிரியம் பிறந்ததில் இருந்து வாக்ஸ்மேன்தான் அவளை வளர்ப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.
அவ்வளவு பாசமான தங்கைக்கு கொடிய பாக்டீரியாவால் தொண்டை அழற்சி நோய் ஏற்பட்டது. அவள் இருமிக்கொண்டும் மூச்சு திணறிக் கொண்டும் இருக்கிறாள்.
அந்த காலத்தில் டிப்தீரியாவுக்கு ஓரளவு நிவாரணம் தரும் மருந்து இருந்தது. ஆனால் அது கிடைத்தது கீவ் என்ற நகரத்தில். வாக்ஸ்மேன் இருக்கும் கிராமத்துக்கும் அந்நகரத்துக்கும் 300 கி.மீ தூரம். குதிரையிலோ அல்லது மாட்டு வண்டியிலோ அதைக் கொண்டு வர தாமதமாகும். அதுவரை மிரியத்தின் நோய் அவளை விட்டு வைக்கவில்லை.
திடீரென்று ஒருநாள் அக்குழந்தைக்கு மூச்சுத் திணறுகிறது. அண்ணனான சிறுவன் வாக்ஸ்மேன் தங்கை மிரியத்தை சுற்றிச் சுற்றி வருகிறான். உள்ளூர் டாக்டர் முடிந்தவரை சிகிச்சை தருகிறார். ஆனால், பலனில்லை!
ஆம், மிரியம் போய்விட்டாள். இனிமேல் மிரியம் அவள் தளிர்க் கரத்தால் அண்ணன் கன்னத்தில் செல்லமாக அடிக்க மாட்டாள். ‘எனக்கு அந்த பூ வேண்டும்’ என்று அடம் பிடிக்க மாட்டாள். இரவு அருகில் படுத்துக்கொண்டு பாட்டு பாடுமாறு அண்ணனைக் கேட்கமாட்டாள்.
தங்கையின் இல்லாமை அண்ணன் வாக்ஸ்மேனை உலுக்கியது. ‘ஏன் கடவுள் அவளைப் பிரித்து அழைத்துப் போய்விட்டார்’ என்று சிறுவன் வாக்ஸ்மேன் அழுகிறான்.
தன் பள்ளிப் படிப்பை முடிக்கும்போதுதான் வாக்ஸ்மேனுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தங்கையைத் தன்னிடமிருந்து பிரித்தது கடவுள் அல்ல, நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள்! தன் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறான்.
மருத்துவத்துறையில் சாதித்து, கொடிய நுண்ணுயிரிகளுக்கு எதிரான மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற லட்சிய வேகம் கொள்கிறான் இளைஞன் வாக்ஸ்மேன்.
அங்கிருந்த அரசியல் சூழல் காரணமாக அவனுக்குப் படிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அவன் தளரவில்லை, அமெரிக்க நாட்டில் குடியேறுகிறான். அங்கு பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறான்.
அப்போது வாக்ஸ்மேனுக்கு இன்னொரு பிரச்னை வருகிறது. அவனுடைய ஆசிரியர் ஒருவர், ‘‘உனக்கு மருத்துவத்துறை வேண்டாம், விவசாயத்துறையை எடுத்துக் கொள்’’ என்று வலியுறுத்துகிறார். வாக்ஸ்மேனுக்கு அதில் விருப்பம் இல்லை. மருத்துவத்துறையில்தான் நுண்ணுயிரிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வசதியாக இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் அவருக்கு விவசாயத்துறைதான் கிடைக்கிறது.
என்றாலும் வாக்ஸ்மேன் கலங்கவில்லை. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கையில் தன் லட்சியத்தை விடாமல் விவசாயத்துறையில் சேர்கிறார். அங்கே அவருக்கு மணல்களை ஆராயும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது குறிப்பிட்ட பகுதி மணலில் ஆக்டினோமைசைட் (Actinomycetes) என்ற பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதைக் காண்கிறார்.
அதை குறிப்பிட்ட ஒரு பூஞ்சை உற்பத்தி செய்கிறது. அந்த பூஞ்சையை வைத்து, வேண்டியபோதெல்லாம் ஆக்டினோமைசைட் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கொள்ளும் யுக்தியைக் கண்டுபிடிக்கிறார். அதற்கு ஒரு உபயோகம் இருக்க வேண்டும் என்று அதை மேலும் ஆராய்ந்தார்.
அது பல கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கவல்லது என்பதையும் கண்டுபிடிக்கிறார். பிறகு தன் ஆய்வை மெருகேற்றி டி.பி என்ற கொடிய காசநோய்க்கான முதல் மருந்தான ஸ்ட்ரெப்டோமைசினைக் கண்டுபிடித்து 1952ம் வருடம் நோபல் பரிசும் வெல்கிறார்.
‘‘நான் என் வாழ்க்கையை நுண்ணுயிரிகளைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டேன். அதன் மூலம் என்னால் முடிந்த அளவுக்கு மனிதகுலத்துக்கு நல்லது செய்ய முயன்றேன்’’ என்று பெருமையுடன் சொன்னார் விஞ்ஞானி வாக்ஸ்மேன்.
சிறுவயதில் தன் பாசத்துக்குரிய தங்கையை இழந்தவுடன், நிலைகுலைந்து போகாமல், தங்கையின் இறப்புக்குக் காரணமான நுண்ணுயிரிகளைப் பற்றிக் கற்று, இனிமேல் யாரும் என்னைப் போல தவிப்புக்கு ஆளாகக்கூடாது என்று காசநோய் என்னும் கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார் அவர்.
கோடிக்கணக்கான தங்கைகளையும் தம்பிகளையும் மனிதர்களையும் காப்பாற்றிய விஞ்ஞானி செல்மன் வாக்ஸ்மேன் நமக்கு சொல்லும் வாசகம் இதுதான்.
‘தளராதீர்கள். நிலைகுலையாதீர்கள். பிரச்னையின் வேரைத் தெரிந்துகொண்டு ஆக்கபூர்வமாகப் போராடுங்கள்!’
செய்தி பரவல்.
News Spread.
Ln.GK Shankar.