
பாடப்புத்தகத்தை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று சந்தேகம் வரும். மணியைப் பார்த்தால் இரவு 10 மணியாக இருக்கும்.
நண்பர்களையோ, ஆசிரியர்களையோ அழைக்க முடியாத நேரம் என்பதால் வேறு வழியின்றி அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்து விட்டு வேறு புத்தகத்தை எடுத்துப் படிக்க தொடங்குவோம்.
இதனால் அந்த பாடத்திலுள்ள அறிவைப் பெற முடியாமல் போய்விடும்.
தனுஸ்ரீ, ஆதித்யா ஆகிய இருவர்தான் மாணவர்களுக்கு பயன்படும் இத்தகைய புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களான இவர்கள், இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து இத்தகைய அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளனர்.
மாணவர்கள் எழுப்பும் சந்தேகத்திற்கு இவர்கள் உருவாக்கிய அப்ளிகேஷன் 10 நொடியில் தீர்வைத் தந்து விடுகிறது. அந்த பாடத்தோடு தொடர்புடைய படங்களை "கிளிக்' செய்தாலே போதும், அதற்குரிய அத்தனை விவரங்களும் திரையில் வரும் என்கின்றனர். அப்படி அவர்கள் அவர்கள் உருவாக்கிய செயலியின் பெயர்தான் டபுட்நட்(Doubtnut app).
பல்வேறு கல்வி நிறுவனங்களில் இவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் கணிதம், அறிவியல் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவு மாணவர்கள் மத்தியில் சரியாகச் சென்றடையவில்லை என தெரிய வந்ததாகக் கூறும் இவர்கள், மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் அப்ளிகேஷனை உருவாக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது என்கின்றனர்.







