சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் சமர்ப்பித்த விடைத்தாள்,
பெரும்பாலானவை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில், 10ம்
வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு
காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில், 80 சதவீதம், வருகை பதிவு
அடிப்படையில், 20 சதவீதம் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அனைத்து பள்ளிகளிலிருந்தும், மாணவர்களின்
காலாண்டு, அரையாண்டு விடைத்தாள், மதிப்பெண் பட்டியல் உள்ளிட்டவை
சேகரிக்கப்படுகிறது. ஒன்றியம் வாரியாக, தலைமை ஆசிரியர் குழுவினர்,
விடைத்தாளை சேகரிக்கின்றனர்.
இதுகுறித்து,
குழுவினர் கூறியதாவது: பொதுத்தேர்வை விட, காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு
மதிப்பெண்களை குறைவாக வழங்குவதுதான் வழக்கம். அரசு பள்ளிகள் அனைத்தும்,
ஏற்கனவே வழங்கப்பட்ட உண்மை மதிப்பெண்களை வழங்கியுள்ளதால், அதிகபட்சம், 450
மதிப்பெண்களை தாண்டவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகள், புதிதாக தயாரித்த
விடைத்தாள், மதிப்பெண் பட்டியல்களை சமர்பித்துள்ளன. இவற்றில், 499
மதிப்பெண்கள் வரை, வாரி வழங்கியுள்ளன. இதுகுறித்து கேட்டால், ஏற்கனவே
வழங்கப்பட்ட மதிப்பெண்கள் தான் என வாதிடுகின்றனர். இந்த விடைத்தாள்களை
வைத்து மதிப்பெண் வழங்கினால், அரசு பள்ளி மாணவ, மாணவியர் பாதிப்புக்கு
ஆளாவர். இதை, தமிழக அரசு கவனத்தில் கொண்டு, மதிப்பெண் சான்றிதழ் வழங்க
வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.







