அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள், வரும், 13ல்
தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது,''
என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம்,
கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையத்தில், அமைச்சர் நேற்று கூறியதாவது:
பள்ளி கல்வித்துறை குறித்து, கல்வியாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை,
இந்த அரசு உள் வாங்கி, என்னென்ன செய்ய இயலுமோ, அதற்கான முயற்சி
மேற்கொண்டுள்ளோம்.
இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா, என்ற கருத்துக்களை
வெளிப்படுத்தினால், எங்களால் பதில் கூற முடியாது. கல்வி சேனல் மூலம், அரசு
பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது குறித்து, கால அட்டவணை தயாரிக்கப்படுகிறது.
ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரையிலான, அரசு மற்றும் நிதியுதவி பள்ளி
மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதி முதல், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்
என்று, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை, மறுநாள் அதாவது,
ஜூலை, 14ம் தேதி முதல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நான்கு
சேனல்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு மட்டும்,
'இபாக்ஸ்' நிறுவனம் மூலம், பாடங்களை லேப்டாப்பில், பதிவிறக்கம் செய்து,
போதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களிடம், அரசின் இலவச
மடிக்கணினி இருப்பதால், அவர்கள் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அமைச்சர்
கூறினார்.