நீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்! உங்களுக்கு சர்க்கரை நோயா ? கண்டிப்பாக இதனை படியிங்கள் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


நீரிழிவுப் பாதமும் பாத வழிபாடும்! உங்களுக்கு சர்க்கரை நோயா ? கண்டிப்பாக இதனை படியிங்கள் :

 diabetes-and-foot-worship
“கலை வேலைப்பாடுமிக்க , தலைசிறந்த இயக்கமுறை உறுப்பு - மனிதனின் பாதங்களே!”-
லியோனார்டோ டாவின்சி .
பரிணாம வளர்ச்சியில் மனிதனை மற்ற விலங்கிலிருந்து பகுத்துக் காட்டுவது , மனித பாதங்களே !! இயற்கையின் பல ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் மிகச் சிறந்த படைப்பு மனிதனின் பாதங்களே!
26 எலும்புகள், 33 கணுக்கள் ( Joints ), நூற்றுக்கும் அதிகமான தசைநார்களும் , தசைநாண்களும் துல்லியமான வடிவமைப்பும் , செயல்பாடும் - கொண்டு இயங்குவது மனிதனின் பாதங்களே!! கலை ஓவியங்களையும் , கோயில் சிற்பங்களையும் எண்ணி வியந்தவர்கள் , சாலச் சிறந்த படைப்பான பாதங்களை அறியாமல் உள்ளோம்.
லியோனார்டோ டாவின்சியின் (1490) அமர ஓவியமான “மோனாலிசா”அறிந்திருப்போம். ஆனால், அவரின் மனித உடல் கட்டமைப்பையும் ( உடற்கூறியல்), செயல்பாடுகளையுமே தன் முழு முதல் காதலாகவும் , பல ஓவியங்களாகவும் வரைந்தவை , இன்றும் வாழ்கின்றன. அவர் மிகவும் ரசித்து வடித்த ஓவியங்களும் வார்த்தைகளும் - பாதத்தை வர்ணித்தே!!



லியோனார்டோ டாவின்சியின் ஓவியம்
இந்தக் கரோனா காலங்களில் , மிகவும் பாதிக்கப்படுவோர் வரிசையில் முதலாம் நிலையில் இருப்பவர்கள் நீரிழிவுப் பாத புண் நோயர்களும் , சிறுநீரக நோயர்களும் , முற்றிய நிலை புற்று நோயர்களுமே !!
( இவர்களைக் கவனிக்கும் வசதி -சில அரசு சிறப்பு மருத்துமனைகளிகளில் இன்றும் நடைபெறுகின்றது )
நீரிழிவு நோயினாலும் , கரோனா காலத்தினாலும் நலிந்து நிற்கும் எளிய மக்களுக்கு, தங்கள் பாதங்களில் புரையோடி புண் ஏற்பட்டால் மிகவும் தளர்ந்து , உறைந்துவிடுகின்றனர் .
உலக சுகாதார அமைப்பு நீரிழிவுப்பாதத்தை, “நோய்குறியியல் வழிமுறையில் கிருமித்தோற்று ஏற்பட்டு,புரையோடி , பாத கட்டமைப்பு வீண் அடைந்து-தசைநாண்களும் , நரம்புகளும் , எலும்புகளும் சிதையும் நிலையில் - புண்ணாக வெளிப்படுகின்றது . நீரிழிவின் வளர்சிதை மாற்றச்சிக்கலால் ( Metabolic Complications), பாதிக்கப்படும் பாதங்கள்” என்று வரையறுக்கின்றனர்.
சீனாவைப் பின்னுக்குத்தள்ளி 2035 ஆம் ஆண்டு இந்தியா , உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் 20லிருந்து 70 வயதிற்குட்பட்டவர்களில் - நீரிழிவு நோயர்கள் 7 கோடி பேர் ஆகும் . இதில் 25 சதவீதத்தினர் பாதப்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீரிழிவு பாதப்புண்களுக்காக 30 சதவீதம் நோயர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு நோயர்கள் , தங்கள் வருமானத்தில் 20 சதவீதத்தைப் பாதப்புண்களுக்காகவே செலவிடுகின்றனர் .இந்தியாவில் நீரிழிவு பாதங்களுக்கு சிறப்பு மருத்துவமனைகள் , வெறும் 3 சதவீதமே!! கிராமப்புறங்களில், நீரிழிவு பாதங்களுக்கு 10 சதவீத நோயர்களே மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் நிலை உள்ளது.
நீரிழிவுப் பாதப்புண்கள், எத்தகைய விளைவுகளை உண்டாக்கும்? கால்களை அகற்றும் நிலை உண்டாகும் காரணிகளில் நீரிழிவு பாதப்புண்களே முக்கிய இடம் பிடிக்கின்றது .விபத்து தவிர்த்து ஏனைய காரணிகளில் , 85 சதவீத கால் இழப்பிற்கு நீரிழிவு பாதப்புண்களே காரணமாக அமைந்து முதலாம் இடத்தைப்பிடிக்கின்றது. உலகெங்கிலும் வருடத்திற்கு பத்துலட்சம் நோயர்கள் இதனால் காலினை இழக்கின்றனர். நமது நாட்டில் சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெறாத நிலையில் வருடத்திற்கு சுமார் 45,000 கால்களை அகற்றும் நிலை - நீரிழிவுப் பாதங்களால் ஏற்படுகின்றது . இவற்றில் 75 சதவீதம் , ஆரம்பக்கட்டத்திலேயே , சரியான அணுகுமுறையால் கால் இழப்பினைத் தவிர்க்கலாம்.
இந்தியாவில் நீரிழிவுப் பாதத்தினால் கால் அகற்றும் நிலை ஏற்படுவதற்கான காரணிகள் என்ன ? சமூக , பொருளாதார , மத நம்பிக்கைகளால் காலணி அணியாமல் - வெறும் பாதத்தில் நடந்து செல்லும் நம் மக்களை , இன்றும் நாம் பார்க்கின்றோம் .
வறுமையும், சரியான கல்வியறிவும் இல்லாமையால் - சரியான காலணிகளை அணிவதை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. ஆரம்ப நிலையில் -அறிவியல் சார்ந்த ஆதாரபூர்வ மருத்துவமுறைகளை( Modern Scientific evidence based Medicine ) அறியாத , மருத்துவக் கல்வியறிவு பெறாத பலரிடம் , ஆலோசித்து , காலம் தாழ்த்தி விடுகின்றனர் . பின்னர் முற்றிய நிலையில் மருத்துவமனைகளுக்கு வருவதால் - பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
பாதத்தின் நேர்த்தியான கட்டமைப்பு , ஒரு சிறந்த கட்டிடக்கலை போன்றே , பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. இயக்கத்திற்கு தகுந்தாற்போல் சிறு எலும்புகளும், தசை நாண்களும், திசுப்படலமும், நுண்ணிய திசுக்களும் , பாதத்தை பல அறைகளாகப் பிரித்து அமைந்திருக்கும் .இந்த இயக்கமுறை பாதக் கட்டமைப்பை , நீரிழிவு நோய் எவ்வாறு சிதறடிக்கின்றது?

சக்கரை அளவினைக் கட்டுப்படுத்தாவிட்டால் , வளர்சிதை சிக்கலால் ( Metabolic Complications) உடலில் நரம்புகள், ரத்த நாளங்கள், கண் மற்றும் சிறுநீரகத்தில் - சார்பிட்டால் (Sorbitol) என்ற வேதிப்பொருள், படிவமாக சேர்ந்து விடும் . இவை நாளடைவில் நரம்பு இயக்கத்தடையாகவும் ( Neuropathy), நுண்ணிய மற்றும் பெரு ரத்த நாள அடைப்பாகவும்( Arteriopathy) உருவெடுக்கின்றன!
நீரிழிவுப் பாத நோயர்களில் , தன்னியக்க நரம்பு இயக்கத் தடையாகவும் ( Autonomic Neuropathy), நாளடைந்த உணர்வு மற்றும் இயக்க நரம்புத் தடையாகவும் ( Chronic Sensorimotor Polyneuropathy)நோய் முற்றுகிறது. மேலும் ரத்த நாள பாதிப்பால் , குருதி ஊட்டக்குறைபாடு ( Ischemia) உள்ள பாதங்கள்-நோய்க்கிருமி தொற்றுக்குத் தகுந்த தளமாக ,மாறிவிடுகின்றது.
நீரிழிவு நோயர்களில் ,60 சதவீதம் உணர்வு ( Sensory Neuropathy)மற்றும் இயக்க நரம்பு தடை (Motor neuropathy)ஏற்படுகின்றது. உணர்வு நரம்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பாத எரிச்சல் , குத்தல் ஆகியவை முற்றுகின்ற நிலையில் , உணர்வற்ற நிலை ஏற்படுகின்றது .இதன் விளைவாக , பாதத்தில் கல் , முள் போன்ற கூர்மையான பொருள் குத்தினாலும் , நோயர்கள் அதைக் கவனத்தில் கொள்வதில்லை.இதனால் எளிதாக நோய்க் கிருமிகள் ஊடேறி , ஆபத்தில் முடிகின்றது!
இயக்க நரம்பு ( Motor Nerve )தசைநார்களையும் , தசைநாண்களையும் தூண்டி செயல்பட வைக்கின்றன. தசைநாண்கள் , பாத சிறுஎலும்பில் கோத்து , இணைந்து செயல்படுகின்றது. இந்த வகை நரம்புகள் பாதிக்கப்படும்போது தசைநாண்களும், நார்களும் சுருங்கி செயல் இழந்துவிடும். அதனால் அது கோத்து நிற்கின்ற பாதசிறு எலும்புகளின் வடிவத்தையும் , செயல்திசையையும் மாற்றிவிடுகின்றன.
நாம் நடக்கும்போதும் , ஓடும்போதும் , நிற்கும்போதும்- நம் உடல் எடையினைத் தாங்கி , இயக்கமுறையில் இருக்கும் பாத எலும்புகள் , வடிவிழந்து , திசைமாறி கூர்மையான எலும்புகளாக மாற்றப்படுகின்றன. இவை பாதக் கட்டமைப்பில் சுற்றி இருக்கும் மென்மையான திசுக்களின் , அழுத்தப்புள்ளியாக மாறி - பாதத்தோல் தடித்து ‘ஆணி’ என்ற சொல்லை நாம் பயன்படுத்துகின்றோம் . பாத ஆணியும், பொருந்தா காலணிகளும் ஆபத்தின் முதல் படி என்று நாம் அறிவதில்லை.
இவற்றைவிட , காலில் ஏற்படும் ரத்தநாள அடைப்பு-குருதி ஊட்டக்குறை (Ischemia )ஏற்படுகின்றது ! ரத்த ஓட்டம் தடைப்பட்ட கால்களும் , பாதங்களும் கிட்டத்தட்ட இருதய ரத்த ஓட்டப் பாதிப்பைப் போன்றே! ஆனால் கால்களில் உள்ள தசைநார்கள் ரத்த ஓட்டமில்லை என்றால் அழுகும்நிலையும் நோய்த்தொற்றும் வேகமாகப் பரவிவிடும்.

“ சுய பாத வழிபாடே -கால்களையும் , உயிரினையும் காக்கும்”. காக்கும் வழிமுறைகளைக் காண்போம் கற்போம்!!
நீரிழிவு நோயர்கள்
1. தினமும் காலை, மாலை இருவேளையும் பாதத்தை நன்றாக கூர்ந்து நோக்குதல் - நன்று!! சிறுபுண்கள் , காயங்கள் , சேற்றுப்புண்கள் , காலணிக் காயங்கள், நகக்கண் வீக்கங்கள் - உடனடிக் கவனம் தேவை ! தம் குடும்பத்தாரிடம் பாதத்தை தினம் ஒருமுறை பார்க்கச்சொல்லுதல் மிக நன்று!!
2. வெறும் காலில் நடப்பதை அறவே தவிர்க்கவும் . சமூக , மத நம்பிக்கைக்காக வெறும் காலில் நடப்பது , நீரிழிவுப்பாதத்திற்கு உகந்தது அல்ல!!
3. நீரிழிவு பாத நோயர்கள்- தாங்கள் அணியும் காலணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் . பொருந்தா காலணியும் , நீரிழிவுப்பாதமும் பொருந்தா காதல் போன்று முடிவு பெறும்.
4. விரல்கள் நடுவே அணிவது போன்ற காலணிகள் , பழைய நைந்த காலணிகள், கடின நெளிவற்ற ரப்பர் காலணிகள் - இவை அனைத்தையும் கண்டிப்பாக தவிர்க்கவும்.
5. பாதத்தை நன்றாகக் கழுவியபின் , சுத்தமான துணியால் காலினை துடைத்துவிட வேண்டும் . விரலிடை ஈரத்தை தவிர்த்தல் வேண்டும் .
6. விரல்களிடையே ஈரப்பசை , பூஞ்சைத் தொற்று ஏற்படவும் , அதன் வழியே கிருமித்தொற்று பாதத்தினுள் பரவும் ஆபத்து உள்ளது!!
7. நரம்பு இயக்கத்தடையில் பாதத்தோல் பகுதி காய்ந்து , வெடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஆதலால் ஈரப்பசை கொண்ட களிம்பை ( Moisturising Cream) உலர்ந்த பாதத்தின் மேலிட வேண்டும் . இவை விரலிடைப் பரவாமல் கவனித்தல் அவசியம்.
8. வசதி வாய்ப்புள்ளவர்கள் , நீரிழிவுப் பாதத்திற்கான சிறப்பு தூய்மை உறையினை ( Diabetic Socks ) அணிந்து கொள்ளலாம் . வேர்வை உறையினைத் தவிர்க்கவும்
.
9. நீரிழிவு பாதநோயர்கள் , சுடுநீரில் கால்களை ஊற வைப்பது ஆபத்தில் முடியும் .
10. நாட்டு மருந்துகள் , இலைதழைகள் , வலிநிவாரணக் களிம்புகள் நீரிழிவுப்பாதத்தில் சுயச்சிகிச்சை செய்வதை , அறவே தவிர்த்தல் நலம் !! ( பலமுறை - இத்தகைய நோயர்கள் சுயசிகிச்சையினால் காலினையும் , உயிரினையும் இழக்கும் நிலை ஏற்படுகின்றது. அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் உடனே சிகிச்சை மேற்கொள்ளவும் )
11. நீரிழிவுபாதத்திற்கு ,சிறந்த காலணிகளாக - சுமை நீக்கப்பட்ட அழுத்தப் புள்ளிகள் நீக்கப்பட்ட காலணிகளே ( Off Loading Footwear)ஆகும். இதன் மூலம் 75 சதவீத பாதப்புண்களைத் தவிர்க்கலாம்.
12. உயிரினையும் , கால்களையும் காப்பாற்ற புகையிலை சார்ந்த அனைத்து வகையான பொருட்களையும் பயன்படுத்தலை நிறுத்த வேண்டும் . இவை போன்றவற்றை பழகாமல் இருப்பதே சாலச்சிறந்ததே!!
13. பாதத்தில் ஏற்படும் ஆணி , தோல் தடித்தல், வெடிப்பு , நிறம் மாறுதல் , புண் , காயங்கள் - உடனடி மருத்துவக் கவனிப்பு அவசியம் .
14. தகுந்த காலணிகளுடன் , நடைப்பயிற்சி , ரத்த சக்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம்.
15. வருடம் இருமுறை மருத்துவர்களை ஆலோசனை தேவை. தேவை இருந்தால் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை மருத்துவரையும் ( Plastic Surgeön) , ரத்தநாள அறுவைசிகிச்சை மருத்துவரையும் ( Vascular Surgeön) ஆலோசித்தல் நன்று!!
2016 அம் ஆண்டு, மத்திய அரசு நீரிழிவுப்பாதத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், “நீரிழிவுபாதநோயர்கள் , பல்வேறு மருத்துவர்களை ஆலோசித்தாலும்- மருத்துவர்களின் கூட்டமைப்பே தகுந்த சிகிச்சை அளிக்க இயலும் . ஆரம்பத் தடுப்பு நடவடிக்கையும் , பாதநோயை அறிவியல் சார்ந்த சிகிச்சை முறையால் , சரி செய்வதுமே கோட்பாடாக இருக்க வேண்டும்”
தடுப்பு நடவடிக்கை , தகுந்த சிகிச்சைமுறை , தகுந்த சுமை அழுத்தப்புள்ளி அகற்றப்பட்ட காலணிகள்- இவை அனைத்தும் எளிய மக்களுக்கு வழங்க அரசு மருத்துவமனைகளே சிறந்த இடம்.
“ அட காடு விளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் , காலும் தானே மிச்சம்”
என்ற ,எளிய மனிதர்களின் கால்களைக் காப்பாற்றும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு!!
முன்னர் குறிப்பிட்டதை போன்ற, சுய பாதவழிபாடு செய்தால் , 75 சதவீதக் கால்கள் இழப்பினை நீரிழிவு பாதநோயர்கள் தவிர்க்கலாம்.
நீரிழிவு பாதத்தால் ஒரு காலினை இழந்தவர்களில் - 50 சதவீத நோயர்கள் மறுகாலினை இரண்டு வருடங்களுக்குள் இழக்க வாய்ப்புகள் அதிகம் . நீரிழிவு நோயர்களைக்காட்டிலும் நீரிழிவுபாத நோயர்களில் 10 வருட இறப்பு விகிதம் 40 சதவீதமாக உள்ளது . ஏனெனில் பாதப் புண்களால் இவர்கள் -நடக்கத் தயங்குவதால் , இவர்களின் இருதயமும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை- எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
முன்னறிந்து, நடக்க இருக்கும் தவறினை தவிர்த்து கொள்ளாதவரின் வாழ்க்கையானது , நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும் !!
நம் பாதங்களே ,நம் வாழ்க்கையை, உலகைப் பற்றி நிற்க வைக்கின்றன. ஆரோக்கியமான பாதங்கள், மகிழ்ச்சியான வாழ்வு- பாதங்களை வழிபடுவோம்!!
மரு. சேகுரா.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H