தமிழக பள்ளிகளில் தற்போது உள்ள பாடத்திட்டம் மத்திய கல்வி வாரியத்திற்கு
இணையாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் தொகுப்பூதிய
ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்தும் கூறியுள்ளார்.
தமிழக பாடத்திட்டம்:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு, பள்ளிக்
கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அரசின்
முயற்சியால் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்
சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை
மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் பள்ளிக் கல்வித்துறை எடுத்து
வருகிறது. தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,
கற்பதற்கு எளிதாகவும் அதே வேளையில் அனைத்து திறன்களையும் உருவாக்கும்
வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு
வருகிறது.
கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்தவரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே
பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. இப்போதும் கூட கடந்த 8
ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் தான் இருந்து வருகிறது. மேலும்
மாநிலம் முழுவதும் சமச்சீர் கல்வி நடைமுறையில் உள்ளது. தமிழக பாடத்திட்டம்
சிபிஎஸ்இ.,க்கு இணையாக உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இன்று திருச்சி
மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும்
பார்வையிட்டார். வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய
வகையில் இருக்கும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து தொகுப்பூதிய
ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு
செல்லப்படும் என உறுதியளித்தார். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது
குறித்தும், மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்தும்
பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.