உயர்க் கல்வி துறையை உயர்த்த பாடுபடவேண்டும் ரோசய்யா:
நமது உயர்கல்வித் துறையை சர்வதேச அளவில் உயர்த்த வேண்டும் என்ற பிரதமர்
மன்மோகன் சிங்கின் ஆசையை, நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நிறைவேறும்"
என கவர்னர் ரோசையா பேசினார்.
கோவை பாரதியார் பல்கலையின் 31வது நிறுவன நாள் விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், தமிழக கவர்னர் ரோசையா தலைமை வகித்து பேசியதாவது:
தற்போதைய இளைய சமுதாயத்தை சர்வதேசம் மற்றும் தேசிய அளவிலும் நிகழும்
சவால்களை சமாளித்து வெற்றி பெற வைக்கும் பொறுப்பு அனைத்து பல்கலைகளிடமும்
உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆசைப்படி நமது உயர்கல்வி துறையை சர்வதேச
அளவுக்கு உயர்த்த வேண்டும். நாம் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் தான் இது
சாத்தியம் ஆகும். தேசிய மற்றும் மாநில அளவில் மற்ற பல்கலைகளுக்கு பாரதியார்
பல்கலை முன்னுதாரணமாக திகழ்கிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைகளை தேர்வு செய்து
படிக்கின்றனர். அடிப்படை ஆராய்ச்சிகள், அறிவியல் ஆராய்ச்சிகளில் அதிகளவு
ஈடுபட வேண்டும். இவ்வாறு கவர்னர் ரோசையா பேசினார்.
முன்னதாக துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை வரவேற்றார். பாரதியார் பல்கலை
முன்னாள் துணைவேந்தர்கள் ஐந்து பேருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பல்கலையில் சிறப்பாக செயல்பட்ட 29 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு
நிறுவன நாள் விருது வழங்கப்பட்டது.
மேலும், சிண்டிகேட் உறுப்பினர்கள் எட்டுபேருக்கு சிறந்த சேவைக்கான
விருது வழங்கப்பட்டது. பாரதியார் பல்கலை பதிவாளர் மனோகரன் நன்றி கூறினார்.