ஜாதிச்சான்று வழங்காமல் இழுத்தடிப்பு: பணம் பறிக்கும் வியூகம் அம்பலம்:
பள்ளி சேர்க்கை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஜாதிச் சான்றுக்காக மக்கள் அலைமோதுகின்றனர். தாசில்தார் அலுவலகத்திற்கு ஜாதிச் சான்றுக்காக சென்றால், "இன்று போய் நாளை வா..." என அலைக்கழிக்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, ஜாதிச்சான்று அட்டைகளை ஊழியர்களே பதுக்கிக்கொள்வதே அலைக்கழிப்புக்கு காரணம்.
குழந்தைகளை பள்ளியில்
சேர்ப்பதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும்,
வேலைவாய்ப்புக்கும் ஜாதிச் சான்றிதழ் கட்டாயம். தாலுகா அலுவலகங்களில்
ஜாதிச்சான்று கேட்டு, தினமும் மனுக் கொடுக்கின்றனர்.
கோவை தாலுகா அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருக்கும் எழுத்தர்கள் மற்றும்
முக்கிய ஜெராக்ஸ் கடைகளில் மட்டுமே இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது.
எழுத்தர்கள் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் தாலுகா அலுவலக,
தகவல் மையத்தில் ஒப்படைத்தால், அத்தாட்சி சான்று கொடுக்கின்றனர்.
இந்த அலைச்சலை விரும்பாத சிலர், இடைத்தரகர்கள் உதவியை நாடுகின்றனர்.
இவர்களிடம் 500 ரூபாய் கொடுத்தால் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அத்தாட்சி
சான்றில் எழுதியிருக்கும் தேதியன்று, தகவல் மையத்திற்கு சென்றால், "தவறாக
நிரப்பப்பட்டுள்ளது, சரி செய்து விண்ணப்பம் கொடுங்கள்" என்கிறார்கள்.
அல்லது, "இன்னும் சான்றிதழ் தயாராகவில்லை. சான்றிதழ் அட்டை பற்றாக்குறையாக
உள்ளது. 2 வாரம் கழித்து வந்து பாருங்கள்" என்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு வாரமும் "இன்று போய், நாளை வா" என திருப்பி
அனுப்புகின்றனர். கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜாதிச்சான்று
பெற்ற ஒருவரிடம் விசாரித்த போது, "மூன்று மாதமாக ஜாதிச்சான்றுக்காக
அலைந்தேன். உள்ளே இருக்கும் ஊழியர் ஒருவருக்கு 300 ரூபாய் பணம்
கொடுத்ததால், அடுத்த நாளே வாங்கி கொடுத்து விட்டார்" என்றார்.
பணம் கொடுப்பவர்களுக்கும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கும்
ஜாதிச்சான்று உடனடியாக வழங்கப்படுகிறது. மக்களிடம் பணம் பறிக்க, தாலுகா
அலுவலக ஊழியர்கள், ஜாதிச்சான்று அட்டைகளை பதுக்கி செயற்கைத் தட்டுப்பாடு
ஏற்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி,
பள்ளி சீசன் காலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
கோவை தெற்கு தாசில்தார் முரளியிடம் கேட்ட போது, "ஜாதிச்சான்று அட்டை
தட்டுப்பாடு கிடையாது. "கடந்த 8ம் தேதி வரை விண்ணப்பம் செய்தவர்களுக்கு
சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில சந்தேகத்திற்காக சான்றிதழ் வழங்காமல்
நிறுத்தி வைத்திருக்கலாம். "தாலுகா அலுவலக ஊழியர்கள் "வேறு மாதிரி"
பேசினால், விண்ணப்பதாரர் என்னை சந்தித்து புகார் சொல்லலாம். இதுபற்றி
விசாரணை நடத்தப்படும்,&'&' என்றார்.
கோவை வடக்கு தாசில்தார் முகமது ரபி கூறுகையில், "அம்மா" திட்டத்தில்
கிராமங்களில் அதிகளவு ஜாதிச்சான்று வழங்கியதால், அட்டை அதிகளவில்
தேவைப்படுகிறது. சான்றிதழ் வழங்க முடியாத அளவுக்கு பற்றாக்குறை
ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதுக்கும் ஜாதிச்சான்று அட்டை பெற,
சென்னையிலுள்ள அரசு அச்சகத்திற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர்" என்றார்.
கலெக்டர் கருணாகரனிடம் கேட்ட போது, "அட்டை தட்டுப்பாடு
ஏற்பட்டிருந்தால், என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கும். இதுபற்றி
விசாரித்து விட்டு சொல்கிறேன்" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...