உடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு:DINAMALAR
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு, ஜூனில் வெளியானது. இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கான சிறப்பு உடனடித் தேர்வுகள், ஜூன் 20 முதல், ஜூலை 3 வரை நடந்தன. மாநிலம் முழுவதும், தோல்வியுற்ற மாணவர்கள் தேர்வெழுதினர்.
தேர்வு முடிவுகள், கடந்த வார இறுதியில் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்ற
மாணவ, மாணவியர், பிளஸ் 1 வகுப்பில் சேர, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்
பள்ளிகளை நாடினர். கடந்த ஜூன் மாதமே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டதாகத்
தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் குறிப்பிட்ட
எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை காலியிடங்களை வைத்திருக்க வேண்டும் என,
அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றனர்.
ஆனால், இதுபோன்று எந்த உத்தரவும் வரவில்லை எனக் கூறும் பள்ளி
நிர்வாகங்கள், மாணவ, மாணவியரை பரிதவிக்கவிட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழக
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.







