அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்:
அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" என மதுரை புத்தக விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசினார்.மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் 8வது புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. கலெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். "பபாசி" தலைவர் சண்முகம் வரவேற்றார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு குறிக்கோளை எடுத்துக்காட்ட, இந்திய பெருமையை, தமிழுக்காக பாடுபட்டோரை அறிய புத்தகங்கள் உதவுகின்றன. கல்விக்காக முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்," என்றார்.
விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: "நிறைய புத்தகங்களை படித்தால்தான் நம்மை நாம் அறிய முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவு ஆகிய 3 தளங்கள் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் மனதை, ஒருமுகப்படுத்தி, ஒரே புள்ளியில் சந்திக்கும் யுக்தியை அறிய வேண்டும்.
அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும். நூல்கள் அறிவுபூர்வமான விஷயங்களை தருகின்றன. எனவே நூலகங்களுக்கு நூல்களை வாங்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 30 கோடி நிதி தந்துள்ளார். செம்மொழி தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகளை கடந்தது என சமீபத்தில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. தமிழை சைவமும், வைணமும் வளர்த்தன. அதனால்தான் 2000 ஆண்டுகளாக சிதையாமல் நிற்கிறது. இத்தகைய தமிழ்மொழி நூல்களை தினமும் 100 பக்கங்களாவது படிக்க வேண்டும். படிக்க படிக்க மகத்தான உயரத்தை அடைவீர்கள்.
நூல்களை பாதுகாக்க புத்தகக் கொள்கையை உருவாக்க வேண்டும் என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் கூறினார். இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆணை பெற்று, பொக்கிஷமாக விளங்கும் புத்தகங்களை பாதுகாக்க "புத்தகக் கொள்கையை" வெளியிடுவோம்." இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மேயர் ராஜன் செல்லப்பா, பபாசி பொருளாளர் வெங்கடாச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர். செயலாளர் வைரவன் நன்றி கூறினார். புத்தகத் திருவிழாவிற்கான, ஊடக உதவியை, "தினமலர்" நாளிதழ் வழங்குகிறது.
தினமலர் ஸ்டாலில் எழுத்தாளர் கையெழுத்து
மதுரை தமுக்கம் புத்தகத் திருவிழாவில், வாசகர்கள் வாங்கி வரும் புத்தகங்களில் நட்சத்திர எழுத்தாளர்கள் தினமும் கையெழுத்திட்டு தர உள்ளனர். தினமும் மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை தினமலர் ஸ்டாலில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இன்று கையெழுத்திடுபவர்
"காவல் கோட்டம்" எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற மதுரையின் எழுத்தாளர் சு.வெங்கடேசன்.
10 சதவீதம் தள்ளுபடி
புத்தகத் திருவிழாவில் 220 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளன. செப்., 9ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகங்கள் வாங்கலாம். அனுமதி இலவசம். 10 சதவீத தள்ளுபடி உண்டு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...