குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் பேட்டி:
அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும்
குரூப்-1 மெயின் தேர்வு விடைத்தாள்கள் 2 முறை மதிப்பீடு செய்யப்படும் என்றுடி.என்.பி.எஸ்.சி. தலைவர்
நவநீதகிருஷ்ணன் கூறினார்.
குரூப்-1 தேர்வு
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில்
காலியாக உள்ள துணை கலெக்டர் உள்ளிட்ட 25 பணியிடங்களில்
பட்டதாரிகளை பணி அமர்த்துவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 முதல் நிலை தேர்வை கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி நடத்தியது. இந்த தேர்வை 75 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,372 பேரை அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்ந்து எடுத்தது. தேர்ச்சி பெற்ற
1,372 பேருக்கு மெயின் தேர்வு கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும்தான்
இந்த தேர்வு 14 மையங்களில் நடந்தது. இந்த தேர்வுகள்
அனைத்தும் பொதுஅறிவை சோதிக்கும் வகையில் இருந்தன. அவை அனைத்தும் கட்டுரைகளாக பதில்
அளிக்க வேண்டியிருந்தது. இந்த தேர்வை 84 சதவீதம் பேர்
மட்டுமே எழுதினார்கள். தேர்வு மையங்கள் மற்றும் தேர்வு எழுதியது அனைத்தும் வீடியோ
பதிவு செய்யப்பட்டது.
இந்த தேர்வு விடைத்தாள்கள் எப்படி
மதிப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்
ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
2 முறை மதிப்பீடு செய்யப்படும்
தேர்வு விடைத்தாள்கள் மிக பாதுகாப்பாக
வைக்கப்படும். நிபுணத்துவம் வாய்ந்தவர்களை அழைத்து அவர்கள் மூலம் இந்த
விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த மதிப்பீடு ஒரு முறை மட்டுமல்லாமல் 2 முறை மதிப்பீடு செய்யப்படும். குரூப்-1 மெயின் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேர்முகதேர்வுக்கு
அழைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் குரூப்-1 அதிகாரிகள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.