இந்தியாவில் பெண்களுக்கு போதிய அங்கீகாரம் இல்லை: அன்னை தெரசா பல்கலை துணைவேந்தர்:
மனித வள மேம்பாட்டில் 180 நாடுகளின் பட்டியலில், இந்தியா 136வது இடத்தில் இருக்கிறது. காரணம், பெண்களுக்கு போதிய அங்கீகாரம் இல்லை" என, தெரசா பல்கலை., துணைவேந்தர் மணிமேகலை பேசினார்.
கொடைக்கானல் பொறியியல் கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா
நடந்தது. பட்டங்களை வழங்கி, தெரசா பல்கலை துணை வேந்தர் மணிமேகலை
பேசியதாவது: "அரசியல், சமூகம், பொருளாதாரம் என எந்த துறையை எடுத்துக்
கொண்டாலும் பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மனித இனத்தில் 50 சதவீதமாக
உள்ள பெண்கள் நசுக்கப்படுகின்றனர்.
வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகம் உழைக்கின்றனர். ஆனால்,
பெண் என்பதால், அவர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. கொடுப்பதை
வாங்கிக் கொள்பவர்கள் பெண்கள் என்றே பலர் செயல்படுகின்றனர்.
கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்வதைத்தவிர வேறு வழியில்லை என பெண்களும் நினைக்கின்றனர். பெண்களின் இந்த மனநிலை மாற வேண்டும்.
மனித வள மேம்பாட்டில் 180 நாடுகளின் பட்டியலில், இந்தியா
136வது இடத்தில் இருக்கிறது. காரணம், பெண்களுக்கு போதிய அங்கீகாரம் இல்லை.
நம்மை விட சீனா எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது.
காரணம், அங்கே பெண்களுக்கு அரசிலும், சமூகத்திலும்,
வீட்டிலும் ஆண்களுக்கு நிகராக மரியாதையும், அந்தஸ்தும் அளிக்கப்படுகிறது.
ஆனால், இந்தியாவில் வீட்டில் இருக்கும் வரை பெண் தெய்வமாக
போற்றப்படுகிறாள். வெளியில் வந்தால், அவர் பத்திரமாக வீடு திரும்புவது
கேள்விக்குறியாக இருக்கிறது.
பெண்களை ஒரு பொருளாக கருதும் ஆண்களின் மனநிலை மாற வேண்டும்.
அவளும் ஒரு சக மனிதன் என மதிக்கும் மனப்பாங்கு வளரவேண்டும். அப்போதுதான்,
இந்தியா எல்லாத்துறைகளிலும் 100 சதவீத வெற்றியைப் பெற்று, உலகின் வல்லரசாக
மிளிர முடியும்" என்றார்.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., ஐ.டி. பிரிவில்
தங்கப் பதக்கம் வென்ற பூஜா சரஸ்வதி உள்ளிட்ட 137 மாணவ, மாணவியருக்கு
பட்டங்கள் வழங்கப்பட்டது.