தமிழாக்கம்: செ.கிருஷ்ணமூர்த்தி
ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம்
உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும்
ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து
வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள்.
உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு
சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.
ஒரு முன்னேறிய நாடாகக்கூடிய ஆற்றலை எப்போதுமே தன்வசம் கொண்டிருந்தும்கூட,
தனது ஆற்றலை நிர்ணயிக்கும் நிலையை எட்டும் தொலைவில் கூட இந்தியா
இருந்ததில்லை. அந்த நிலையை அடைந்திட வேண்டிய தருணம் இது.
முன்னேற்றம்
என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமே
முன்னேற்றம் ஆகிவிடாது. எனினும், முன்னேற்றத்தின் ஆரம்ப நிலைகளில்
பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமான தொடர்பைக் கொண்டது. முன்னேற்றம்
இல்லாமல் வெறும் பொருளாதார வளர்ச்சி அடைவது சாத்தியம். அதேபோல்
பொருளாதார வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றம் அடைவதும் சாத்தியமே. ஆனால், ஒரு
குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகே முன்னேற்றம் என்பது
சாத்தியம்.
நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம்
பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தை கொண்டு வருவதற்கான திறனும்,
சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம் உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள்.
மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க
முடியும்.
ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு.
அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும்,
உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய
நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு
உண்டு.
நீங்ளோ,
நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே
போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா
முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் நாம்
ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களின்
துயரத்தை மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு
இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக்
காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின்
உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக்
கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த
ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே,
நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.
முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல்
போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச்
சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப்
பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது.
பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன்
பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும்
முன்னேற்றமும் அடைவது நமக்கு மிக அவசியம்.
ஏன் இந்தியா சுதந்தரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் பொருளாதார வளர்ச்சி
அடைந்த நாடாக இல்லை? அதற்கு எவையெல்லாம் தடைகளாக இருந்தன, இருக்கின்றன?
தடைகள் தானாக அமைந்தனவா அல்லது அமைக்கப்பட்டனவா? இந்தத் தடைகளை நீக்க நாம்
என்ன செய்ய வேண்டும்?
‘ஒரு
பிரச்னையைத் தீர்க்க ஒருமணி நேரமே உள்ளது; அதன் தீர்வில்தான் நான்
உயிர்வாழ்வது அடங்கி உள்ளது எனும்போதும், முதல் 55 நிமிடங்களை முறையான
கேள்வியைத் தீர்மானிப்பதில்தான் செலவிடுவேன். ஏனெனில், முறையானக்
கேள்வியைத் தெரிந்து கொண்ட பின்னால் அந்தப் பிரச்னைக்கு ஐந்து
நிமிடங்களுக்குள் என்னால் தீர்வு கண்டுவிட முடியும்.’
இந்தியா ‘கூடிய விரைவில் ஒரு வல்லரசாகிவிடும்‘ அல்லது ‘இந்த தேசத்தையோ
அல்லது அந்த தேசத்தையோ முந்தப்போகிறது‘, ‘தகவல் தொழில்நுட்ப வல்லரசு‘
போன்ற கோஷங்களை நாம் எப்போதும் கேட்டவண்ணம் இருக்கிறோம். கேட்பதற்குப்
பெருமையாக இருந்தாலும் அவையாவும் நம்பமுடியாத வீண் பேச்சுகள்; சிறிய
ஆய்வுகளை எதிர்கொள்வதற்குக்கூட இந்தக் கோஷங்கள் தகுதியற்றவை.
இந்தியா பற்றிய புத்தகங்களை எழுதுவது குடிசைத் தொழில் அளவுக்கு
மலிந்துவிட்டது. சிலர் இந்தியா எப்படி ஒரு உயர்ந்த நிலையை அடையப்போகிறது
என்பது பற்றியும், சிலர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும்,
சிலர் செய்வதற்கு என்ன மீதம் உள்ளது என்பது பற்றியும் எழுதுகிறார்கள்.
ஆனால் எந்தப் புத்தகமும் ‘ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?’ என்ற கேள்வியை
ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.
ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?:
ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடை முக்கியமானது. ஏனெனில்,
அது பல கோடி மக்களின் வாழ்வாசாவா பிரச்னை சம்பந்தப்பட்டது. அந்தக் கேள்வி
பின்வரும் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
முதலில், இந்தியாவின் ஏழைமை என்பது தவிர்க்க இயலாமல் அமைந்தது அல்ல.
இந்தியா செல்வச் செழிப்பான முன்னேறிய நாடாக ஆகியிருக்க முடியும். இரண்டு,
இந்தியா ஏன் ஏழை நாடு என்பதற்குக் காரணங்கள் உண்டு. நாம் காரணங்களைப்
புரிந்துகொள்ளும் பட்சத்தில் அவற்றைப் பற்றி ஏதேனும் செய்திட முடியும்.
ஏன் இந்தக் கேள்வியை எவருமே கேட்பதில்லை? அப்படி ஒரு கேள்வி நாகரிகம்
அற்றதாக ஆகிவிட்டதுதான் அதற்கான காரணம் என்பது என்னுடைய ஊகம். குறிப்பாக,
அந்தக் கேள்விக்கான நேர்மையான பதில் கேட்பதற்கு இனிமையானதாக இல்லை. அந்த
நேர்மையான பதில், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்ட,
கருதப்படும் பல தலைவர்களின் பெருமைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும்.
சுதந்திரத்துக்குப்பின் நாட்டை வழி நடத்தியவர்கள் மேதைகளோ, மிகச் சிறந்த
அறிவாளிகளோ அல்ல என்பதை அம்பலப்படுத்திவிடும்; நாம் பெருமையாகக் கருதும்
பல நம்பிக்கைகளைத் தவறு என்று அப்பட்டமாகச் சுட்டிக்காட்டிவிடும்.
இந்தியா
ஏழைமையைத் தேர்ந்தெடுத்த நாடு. ‘ஏழைகளாக வாழ்வோம்’ என்று மக்கள்
விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்ததாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
நாம் தேர்ந்தெடுத்த தேசத்தின் தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசமான
பொதுநலத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் விளைவாக இன்று நம்மைச்
சூழ்ந்திருக்கும் ஏழைமையைத் திணித்துள்ளனர். தவறான தலைவர்களும் அவர்களின்
திட்டங்களும் காலப்போக்கில் பரவலான, கடுமையான ஏழைமை நிலைக்கு நாட்டைத்
தள்ளியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களே ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி
அமைகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. மோசமான, தவறான திட்டங்கள் பொலிவற்ற
பொருளாதார நிலைமைக்கு வித்திடுகின்றன; நல்லத் திட்டங்கள் மட்டுமே
வெற்றிக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வித்திடும். இந்த
உண்மையை நாம் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும்.
ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போதுதான்,
நாம் வெகுவாகக் கொண்டாடும் தேசத் தலைவர்கள் என்ன மாதிரியான தவறுகளைத்
திரும்பத் திரும்ப இழைத்துள்ளனர் என்பது வெளிப்படும். தவறுகளைச் சுட்டிக்
காட்டுவது பதவியிலும் பலத்திலும் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. நாட்டின்
சிற்பிகளாக நம்மால் கருதப்படும் தலைவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக
இருந்துள்ளனர் என்பதைக் கூறுவது பாதுகாப்பான செயலே அல்ல.
இந்தியா முன்னேறத் தவறியதற்கு இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகளைக் குற்றஞ்சாட்டுவது தவிர்க்க இயலாதது.
நான் பொருளாதாரம் படித்தவன். ஆகவே, என்னுடைய பார்வை ஒரு வரலாற்றாசிரியர்
போலவோ, அரசியல் விஞ்ஞானியைப் போலவோ இல்லாமல் வேறுபட்டே
இருக்கப்போகிறது.
நமது பெற்றோர்களும் பாட்டன்மார்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காகப்
போராடியவர்கள். நமக்குப் பின்வரும் தலைமுறை அவலநிலைகளைக் காண்பதை நாம்
விரும்பமாட்டோம். நாம்தான் இந்தியாவின் மாறுபாட்டை உருவாக்கியவர்களாக
இருக்க வேண்டும். அதை இப்போதே செய்யவும் வேண்டும். அப்போதுதான்
எதிர்காலத்தில் உங்கள் குழந்தையோ, இளைய சமுதாயமோ உங்களிடம் ‘நீங்கள் நாடு
இருந்த மீள முடியாத நிலையைக் கண்டீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதையும்
அறிந்து இருந்தீர்கள். ஏதாவது செய்தீர்களா?’ என்று கேட்கும்போது அந்தக்
குழந்தையின் கண்களைப் பார்த்து, ‘ஆம். என்னால் இயன்ற அளவு செய்தேன். அதை
உனக்காகச் செய்தேன்.’ என்று உங்களால் பதில் அளிக்க முடியும்.