பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி:
பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மண்டல அளவில் வெற்றி பெற்ற 360 மாணவ, மாணவியர் இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கான பரிசு விவரங்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படவுள்ளன.
மாணவ, மாணவியரின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்காக பள்ளி அளவில் செஸ்
விளையாட்டுப் போட்டி அறிமுகம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா
அறிவித்தார்.
அதன்படி, பள்ளிகளில் செஸ் விளையாட்டு விழிப்புணர்வும், விளையாட்டுப் பலகைகளும் வழங்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் பள்ளி அளவில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி போட்டிகள்
நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 55 ஆயிரம் பள்ளிகளிலிருந்து 11 லட்சத்து
25 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
11 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 5-ம் வகுப்பு வரை படிக்கும்
மாணவர்களும், 14 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு
வரை படிக்கும் மாணவர்களும், 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் 6 முதல்
10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், 19 வயதுக்குள்பட்டோருக்கான
போட்டியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களும் பங்கேற்றனர்.
பள்ளி அளவில் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஒன்றியம், கல்வி
மாவட்டம், மாவட்டம் மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி
அளவில் வெற்றி பெற்ற 89,842 மாணவர்கள் ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில்
வெற்றி பெற்ற 10,754 மாணவர்கள் கல்வி மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவில்
வெற்றி பெற்ற 1,915 மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலும், வருவாய் மாவட்ட
அளவில் வெற்றி பெற்ற 926 மாணவர்கள் மண்டல அளவிலும் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்ற 360 மாணவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. இந்த இறுதிப் போட்டி 6 சுற்றுகள்
கொண்டதாக சுவிஸ் ரேபிட் முறையில் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியும் ஒரு
வீரருக்கு 20 நிமிடங்கள் என மொத்தம் 40 நிமிடங்கள் கொண்டதாக நடத்தப்பட்டது.
இப்போட்டிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் பார்வையிட்டார்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, பள்ளிக் கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக்
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன்,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.