கல்லூரிகளில் கண்காணிப்பு கேமரா: தமிழக அரசு உத்தரவு:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், கல்லூரி வளாகம், வகுப்பறை ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கல்லூரி முதல்வர் அறையில், தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து அனைத்து கேமராக்களின் பதிவையும் உடனடியாக கண்காணிக்க வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரிகளில், மாணவர்களுக்குள்
அடிக்கடி மோதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை
சட்டக் கல்லூரியில் மோதல் ஏற்பட்டு, மாணவர்கள் மண்வெட்டியால் தாக்கிக்
கொண்டனர். சென்னை, நந்தனம் கல்லூரி மாணவர்களுக்கும், காமராஜர் சாலையில்
உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பேராசிரியர்கள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்நிலையில் "மோதல் சம்பவங்களை தவிர்க்க, அனைத்து கல்லூரிகளிலும்
கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி வளாக மெயின் கேட், வளாகத்தின் முன்புறம், பின்புறம், வகுப்பறைகள்,
வளாக பாதைகள் மற்றும் ஆய்வகங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும். இந்த
கேமராக்களின் பதிவை கல்லூரி முதல்வர் அறையில் அமைக்கப்படும் கட்டுப்பாட்டு
அறையிலிருந்து, எப்போதும் ஒரு ஊழியர் கண்காணிக்க வேண்டும்.
மாணவர்களிடையே மோதல் அல்லது வெளியாட்கள் நடமாட்டம் போன்ற அறிகுறிகள்
தெரிந்தால், கல்லூரி முதல்வர் மூலம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கல்லூரிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டில், 62 அரசு கலை அறிவியல்
கல்லூரிகள்; ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள்; 162 அரசு உதவி பெறும்
கல்லூரிகள் உள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3.55 லட்சம் பேர்;
சுயநிதி கல்லூரிகளில், 3.72 லட்சம் பேர்; 35 பல்கலைக்கழக உறுப்பு மற்றும்
கலை அறிவியல் கல்லூரிகளில், 20 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.







