கணிதத்தைக் கண்டு பயப்படும் மாணவரா நீங்கள்?
கணிதம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில்
நூற்றுக்கு நூறு வாங்கி விடுவேன் என்று சொல்லும் பிள்ளைகள் ஒரு ரகம்,
கணிதமா அதில் நான் தேர்ச்சி பெற்றாலே அதிகம் என்று நினைக்கும் பிள்ளைகள்
மற்றொரு ரகம். இதில் நீங்கள் என்ன ரகம்?
வாருங்கள் கணிதம் என்றால் என்னவென்று பார்ப்போம்...
துவக்கப் பள்ளி வகுப்புகளில் வெறும் கூட்டலும், கழித்தலும் எளிதாக
இருக்கும். இதுவே 10ம் வகுப்பு கணிதம் வரை எல்லா மாணவர்களுக்கும்
எளிதானதுதான் கணிதம்தான். சில குழந்தைகளுக்கு சரியாக
கற்பிக்கப்படாத,அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பிக்கப்படாத பிள்ளைகளுக்கு
மட்டுமே கணிதம் கடினமாக இருக்கும். அவர்களும், ஒவ்வொரு கணிதத்தையும்
தனித்தனியாக பிரித்து அவர்களுக்கு புரியும் விதத்தில் கற்பித்தால் கணிதம்
என்பது எல்லோருக்குமே எளிதான பாடம்தான். இதுவரை படிக்கும் கணக்குக்கு
எல்லாம் பதில் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும். பதில் தவறு
அல்லது சரி என்ற இரண்டே வாய்ப்புதான் இருக்கும். அதன் அடிப்படையில்
தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அமையும். கணக்கை எவ்வாறவாது போட்டு பதிலை
சரியாக பதிவு செய்துவிடும் மாணவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் உயர்நிலைப் படிப்புகளில்தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. கணிதம்
என்பது பல்வேறு மாறுதல்களைப் பெற்று உருமாற்றம் பெறுகிறது. கணிதத்தில்
ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனி பார்முலாக்கள், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி
பதில்கள், வழிமுறைகள் சரியாக இருந்தால் அதற்கு மதிப்பெண், பதில் சரியாக
இல்லாவிட்டாலும், சரியான முறையில் கணிதத்தை கொண்டு வந்திருந்தால் மதிப்பெண்
என்று, சரியான பார்முலாவை பயன்படுத்தியிருந்தால் அதற்கும் மதிப்பெண் என்று
முன்னேறுகிறது. ஆனால் இந்த நிலைக்கு மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை
முன்னேற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
கணிதத்தை வெறும் எண்களாகக் கொடுப்பதால்தான் பல மாணவர்களுக்கு பிரச்சினை
ஏற்படுகிறது. அதுவே வாழ்வியல் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்பு படுத்தி
கணிதத்தை கற்பித்தால் நிச்சயம் எளிதாகவே இருக்கும் என்கிறார்கள்
கல்வியாளர்கள்.
அதற்கு ஒரு உதாரணமாக, கணிதத்தின் ஒரு பகுதியான, ஒரு நிறுவனத்தை
நடத்துபவர்கள், ஒரு திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை நபர்களை
வைத்து ஒரு வேலையை செய்தால், அது எத்தனை நாட்களில் நிறைவடையும் என்பது
போன்ற கேள்விகளை மாணவர்கள் அதிகமாக தேர்வு செய்து எழுதுகிறார்கள். இதற்குக்
காரணம் ஒரு கணிதத்தை நடைமுறைப்படுத்தும் போது அதனை போடும் வழி எளிதாகிறது.
இதனால் மாணவர்களுக்கு அந்த கணிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது. இதற்கு
சரியான பதிலை கண்டு பிடிக்க இயலாவிட்டாலும் சரியான வழிமுறையை பின்பற்றி
கணிதத்தைப் போடுவார்கள்.
வெறும் எண்களையும், பார்முலாவையும் மட்டுமே கொண்டிருக்கும் கணிதப்
பகுதிகள்தான் மாணவர்களுக்கு சிரமத்தை அளிக்கின்றன. சரியான பதிலை கொண்டு
வருவதற்கு பார்முலாவை திரும்ப திரும்ப போட்டும், கால்குலேட்டரை எந்த
முறையில் தட்டினாலும் சரியான பதில் வராத பட்சத்தில் மாணவர்கள் அதிக மன
அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அறிவியல் போன்ற பாடங்கள் வாழ்வியலோடு
தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் கணிதம் என்பது மாணவர்களுக்கு வெறும்
பாடமாக மட்டுமே இருப்பதால் அதனை வெறுமையான பாடமாகக் கருதுகிறார்கள். இது
நமக்கு வரவே வராது என்று தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள்.
வகுப்பறையில் சரியாக கவனிக்காதபட்சத்திலோ, கணிதத்தை கற்றுக் கொடுக்கும்
ஆசிரியர், மாணவர்களுக்கு கற்பித்தல் திறன் பெற்றவராக இல்லாமல் இருந்தாலோ,
தான் மிக புத்திசாலி என்பதை வகுப்பறையில் காண்பிப்பவராக இருந்தாலோ பல
நேரங்களில் மாணவர்களுக்கு கணிதம் என்பது கடினமாகிவிடுகிறது.
இது இல்லாமல், கணிதத்தை நமது வாழ்வியல் நடைமுறையுடன் தொடர்பு படுத்தி
அதனை எவ்வாறு கையாள்வது என்று தொடர்ந்து பயிற்சி எடுத்தால் நிச்சயமாக
கணிதம் கைவந்த கலையாகிவிடும்.
எந்தக் கலையும் கற்றுக் கொண்டால் எளிதாவது போல கணிதமும் கற்க, கற்க,
பயிற்சி எடுத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் எல்லாருக்குமே கணிதம் என்பது
கடினமாக இருக்காது. ஒரு கணிதம் வரவேயில்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிட
வேண்டாம். மற்ற கணிதப் பயிற்சிகளுக்கு அரை மணி நேரம் ஒதுக்கினால், வராத
கணிதத்திற்கு கூடுதலாக ஒரு 10 நிமிடங்களை ஒதுக்குங்கள். கணிதத்தை சிறப்பாக
போடும் மாணவர்களிடம் உங்கள் சந்தேகங்களையும், அவர்களது நுணுக்கங்களையும்
கேட்டறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு மதிப்பெண்ணை உங்கள்
இலக்காக வைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சியுங்கள். நூற்றுக்கு நூறு என்பது
எட்டாத இடத்தில் இல்லை.








