வில்லியனூர் அடுத்த பொறையூர் ஆதித்யா பள்ளியில்
நீர் சேகரிப்பு மற்றும் புவி பாதுகாப்பு என்ற கருத்தை மையமாக கொண்டு
ஒன்பதாவது ஆண்டு விழா கடந்த 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் நடந்தது.
பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர்
ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 2012
& 2013 கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற பத்து மற்றும் பிளஸ் 2
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
பத்தாம்
வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அரசு பள்ளிகள் போல்
இந்த பள்ளியும் சேர்த்து பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் செயல்
பாராட்டுக்குரியது. மருத்துவம், பொறியியல்துறை நம்முடைய மாணவர்கள் சாதனை
படைக்கிறார்கள். இதற்கு காரணம் புதுவை அரசு உயர்கல்வி வரை இலவசமாக
வழங்குவதுதான். ஆண்டுக்கு குறைந்தது 10 மாணவர்களாவது ஐஏஎஸ் தேர்வில் வெற்றி
பெறவேண்டும். இதுதான் எனது ஆசை. இதற்காகத்தான் எனது அரசு பாடுபட்டு
வருகிறது. இதை நான் வலியுறுத்துவதற்கு காரணம் நல்ல திறமையான அதிகாரிகள்
இருந்தால்தான் சிறந்த ஆட்சியை தர முடியும். முதலமைச்சராக இருந்தாலும்,
அல்லது அமைச்சர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சில முடிவுகள்
எடுக்கும் போது அதற்கு முறையான ஆலோசனை வழங்குவது ஐஏஎஸ் அதிகாரிகள்தான்.
புதுவை
அரசானது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை கழகத்தின் மூலம் 20
மாணவர்களும், பாட்கோ மூலம் 20 மாணவர்களும் தேர்ந்தெடுத்து ஐஏஎஸ்
பயிற்சிக்கு அனுப்புகிறது. ஆண்டு முதல் இந்த ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியை
புதுவை மாநிலத்திலேயே நடத்த ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அசோக்ஆனந்த்
எம்எல்ஏ, ஸ்ரீவித்யநாராயணா அறக்கட்டளை உறுப்பினர் அனுதா பூந்தமல்லி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர்கள் மணிவிஜயராகவன், ஆனிதெரசா,
பிரவணன், பள்ளியின் கல்வி இயக்குனர் நடேசன் காங்கேயன் ஆகியோர் சிறப்பு
விருந்தினர்களை வரவேற்றனர்.
பள்ளி
கலைத்துறை இயக்குநர் கலைமணி ராஜமாணிக்கம் தலைமையில் மாணவர்கள் ஆடல், பாடல்,
இசைக்கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்பயிற்சி இயக்குநர் அமீத் அசோக்குமார் பட்டேல்
மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி விக்னேஷ் செய்திருந்தனர்.







