498 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்விற்கான
கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை)
நடக்கிறது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2013–14–ம் கல்வி
ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
பெற தகுதி வாய்ந்தோர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ் 179,
ஆங்கிலம் 82, கணிதம் 87, அறிவியல் 65, சமூக அறிவியல் 85 என மொத்தம் 498
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான இணையதளம் வாயிலாக கலந்தாய்வு
இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகின்றது.
இதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை
கல்வி அலுவலகங்களில் நடத்தப்பட்டு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
மேலும் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் வழங்க தமிழ் 16, ஆங்கிலம் 74,
கணிதம் 27, அறிவியல் 14 மற்றும் சமூக அறிவியல் 21 என மொத்தம் 152
ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இணையதளம் வாயிலாக கலந்தாய்வு
இவர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான இணையதளம்
வாயிலாக கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்று பிற்பகல் 2.30
மணிக்கு நடத்தப்பட உள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு
வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாவட்ட தலைமையிடங்களில் அமைந்துள்ள
ஏதேனும் ஒரு முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தங்களுடைய ஆசிரியர் தேர்வுக்கூட
நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), கல்வி சான்றிதழ் மற்றும் இதர
சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.







