அண்ணா பல்கலைக்கழகத்தில் மறு மதிப்பீடு தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மறு மதிப்பீடு முடிவில் திருப்தியடையாத மாணவர்கள் வரும் 22-ஆம் தேதி வரை மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
2013 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இணைப்புக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வுக்கான இந்த மறு மதிப்பீடு முடிவுகள் coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவில் திருப்தியடையாத மாணவர்கள், விடைத்தாள் மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் மூலம், பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ.3,000 வரைவோலையாகச் செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழக தேர்வு முடிவிலும், மறு மதிப்பீட்டிலும் தோல்வியடைந்து, மறு ஆய்வில் தேர்ச்சி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும், ஏற்கெனவே தேர்ச்சி பெற்று மறு ஆய்வில் குறைந்தபட்சம் 5 அல்லது அதற்கு மேல் கூடுதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கும் கட்டணமாக அவர்கள் செலுத்திய ரூ.3,000 திரும்ப அளிக்கப்பட்டுவிடும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.







