தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து
மீட்கப்பட்டு, பிளஸ் 2 தேர்வு எழுதிய, 480 பேரில், 465 பேர் வெற்றி
பெற்றுள்ளனர். 1,144 மதிப்பெண் பெற்று சாதித்துள்ள, நாமக்கல் மாணவர்
கோபால், 'ஆதரவு தந்தால் டாக்டருக்கு படிப்பேன்' என, தெரிவித்து உள்ளார்.
குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய கல்வி அளிக்கும் வகையில்,
குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
330 பள்ளிகளில், 11
ஆயிரம் பேர் படித்து வருகின்றனர்.இதில், 480 மாணவ, மாணவியர், பிளஸ் 2
தேர்வு எழுதினர்; 15 பேர் தவிர, 465 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில், 24
பேர், 1,000த்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.நாமக்கல்லைச் சேர்ந்த
கோபால், 1,144 மதிப் பெண் பெற்று சாதித்து உள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்:
தமிழ் - 186, ஆங்கிலம் - 172, இயற்பியல் - 198, வேதியியல் - 197, உயிரியல் -
196, கணிதம் - 195.இவர், தறியில் குழந்தைத் தொழிலாளியாக இருந்து, 2007ல்
மீட்கப்பட்டு, சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின், முறைசார்
பள்ளியில் படித்து, சாதித்துள்ளார்.
இதுகுறித்து, மாணவர் கோபால் கூறியதாவது:நான் படிக்கவும், அதிக மதிப்பெண்
பெறவும், பலரின் ஆதரவு தான் காரணம். எம்.பி.பி.எஸ்., படித்து, கிராமப்புற
ஏழைகளுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது, என் விருப்பம். 'கட் - ஆப்' மார்க்,
சற்று குறைவாக உள்ளதால், பல் மருத்துவம் படிக்க திட்டமிட்டு உள்ளேன்.
எனக்கு, நல் மனதுள்ளோர் உதவினால், மென்மேலும் சாதிப்பேன். இவ்வாறு, அவர்
கூறினார்.
இது போன்று, விருதுநகரில் குழந்தை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்ட மாணவியர்
மகாலட்சுமி, ஜெயந்தி ஆகியோர் முறையே, 1,068, 1,053 மதிப்பெண் பெற்று
சாதித்து உள்ளனர். மாதந்தோறும் ரூ.500இதுகுறித்து, தேசிய குழந்தை தொழிலாளர்
திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குழந்தை தொழிலாளர்களாக இருந்தோர், இந்த
அளவு சாதித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு பல அமைப்புகளும் அளித்த
ஊக்கமே இதற்கு காரணம். கல்லூரி படிப்பை முடிக்கும் வரை, தமிழக அரசு,
மாதம்தோறும், 500 ரூபாய் வழங்கும். பிற அமைப்புகளும் உதவினால், உயர்
கல்வியிலும் இவர்கள் சாதிப்பர்' என்றார்.