ஆசிரியர்
தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிட்டதை அடுத்து, 72 ஆயிரம் பேரில்,
தகுதியான, 15 ஆயிரம் பேர் தேர்வுப் பட்டியல், 20 நாளில் வெளியிடப்படும்'
என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்றிரவு
தெரிவித்தது.ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் திட்டத்தை, தமிழக அரசு, நேற்று அறிவித்தது.
இதையடுத்து,
15 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமன பணியை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி.,
முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்றிரவு
கூறியதாவது: கடந்த ஆண்டு, ஆகஸ்ட் தேர்வு மற்றும் தேர்ச்சி மதிப்பெண்ணில், 5
சதவீத சலுகை காரணமாக தேர்ச்சி பெற்றவர் என, 72 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு, நடத்தி முடிக்கப்பட்டு
விட்டது. கல்வி தகுதிக்கான, 40 மதிப்பெண் மட்டும் அளிக்காமல், சான்றிதழ்
சரிபார்ப்பை முடித்துவிட்டோம். தற்போது, புதிய அரசாணையின்படி, கல்வி
தகுதிகளுக்கும், டி.இ.டி., தேர்வுக்கும், மதிப்பெண் அளிக்க வேண்டும். சதவீத
அடிப்படையில் கணக்கிட்டு, மதிப்பெண் அளிக்க வேண்டி உள்ளது. இந்தப் பணியை,
இரு வாரங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம். அதிகபட்சமாக, 20
நாட்களுக்குள், 72 ஆயிரம் பேரின், 'ரேங்க்' பட்டியலை வெளியிட்டு விடுவோம்.
அப்போது, 15 ஆயிரம் புதிய ஆசிரியரின் தேர்வு பட்டியலும் வெளியிடப்படும் என
டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.







