கோடை
விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது.
மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர்.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம்
தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு ஜூன் 2ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சுட்டெரிக்கும் வெயில்
காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி போட வேண்டும் என்று தனியார
பள்ளிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
ஆனால் தமிழக அரசு அதை
நிராகரித்தது. இதை தொடர்ந்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள்
மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அறிவித்தபடி இன்று காலை
திறக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகமாக இன்று காலை பள்ளிகளுக்கு
வந்தனர். காலை 9.30 மணிக்கு நடந்த இறைவணக்கத்தில் மாணவ, மாணவிகள் கலந்து
கொண்டனர். 10 மணிக்கு வகுப்புகள் தொடங்கியது. பின்னர் மாணவ, மாணவிகளுக்கு
இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.பாடப்புத்தகங்கள்
வழங்கப்படவில்லை என புகார் வந்தால், அதற்கு அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களே பொறுப்பு என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதேபோல்
சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. சில
தனியார் பள்ளிகள் 4ம் தேதியும் சில பள்ளிகள் 5, 9 ஆகிய தேதிகளிலும்
திறக்கப்போவதாக அறிவித்துள்ளன. முதல் நாளான இன்று ஆசிரியர்கள் யாரும்
விடுமுறை எடுக்கக் கூடாது என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே எச்சரித்ததால்
ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்தனர்.பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள்
செல்போன் பயன்படுத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆசிரியர்கள் வருகை
பதிவேட்டை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், மாணவர்கள் இடை நிற்றலை தடுக்கவும் ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது







