இலவச கல்வி ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் மற்றும்
கட்டணம் செலுத்தாத குழந்தைகளை பிரித்து பார்த்தல், தரையில் அமரவைத்தல்,
வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும், மெட்ரிக்
பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் கட்டாயக் கல்விச்சட்டம்
அமல்படுத்தப்பட்ட பின், சிறுபான்மையினர் அல்லாத தனியார் மெட்ரிக்
பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நலிந்த
மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசு திருப்பி
செலுத்தும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீது புகார்
ஆனாலும், பல பள்ளிகளில் இந்த இடஒதுக்கீட்டின் படி
குழந்தைகளை சேர்க்க முடிவதில்லை. விதிமுறைகளை கூறியும் அதிகாரிகளிடம்
புகார் செய்தும், குழந்தைகளை சேர்த்தாலும், அவர்களை வகுப்புகளில் தனியே அமர
வைத்தல்; வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தல்; தரையில் அமர வைத்தல் உள்ளிட்ட
செயல்களில் பல மெட்ரிக் பள்ளிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதை
அடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் ஒரு
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், கூறியிருப்பதாவது
குழந்தைகள் தானாகவே பள்ளியை தேர்ந்தெடுத்து அதில்
சேர்வதில்லை. பெற்றோரே பள்ளியை தேர்ந்தெடுத்து குழந்தைகளை சேர்க்கின்றனர்.
எனவே, பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்கு, எவ்விதத்திலும் பொறுப்பாகாத
குழந்தைகளை வகுப்பறையில் பிரித்து பார்த்தல், தண்டித்தல் போன்றவை முறையற்ற
செயல்.
கடும் நடவடிக்கை
அதேபோல், கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதை அனைவரின்
முன்பாக தெரிவிப்பதும் தவறான செயல். இதுபோன்று, குழந்தைகளை துன்புறுத்துவது
மனதளவில் பாதிப்படைய செய்துவிடும். கட்டாயக் கல்விச் சட்டத்தில் நுழைவு
வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை மிரட்டுவதற்காக குழந்தைகளை
தண்டிக்கக்கூடாது. இதுபோல் செயல்படும் பள்ளிகளை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள்
கண்காணித்து, துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு,
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







