அரசு கல்லூரிகளில் வாய்ப்பு இல்லாத நிலையில், பெற்றோரின் பார்வை, தனியார் கல்லூரிகள் பக்கம் சென்றுள்ளன.'தன் குழந்தையை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும்' என்ற, கனவுடன், பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு, தனியார் கல்லூரிகளை சுற்றி வருகின்றனர் பெற்றோர்.தேர்வு முடிவுகள் வெளியானதுமே, வசதி படைத்தோர், முன் பணம் செலுத்தி, தனியார் கல்லூரிகளில், 'துண்டு' போட்டு இடம் பிடித்துள்ளனர்.
போட்டி அதிகரித்துள்ள நிலையில், சீட்டுக்கு, நன்கொடை, 50 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. புதிதாக வருவோருக்கு சில கல்லூரிகள், 60 லட்ச ரூபாய் வரை வசூலிக்கின்றன. பெற்றோர் கல்லூரிகளைச் சுற்றுவதுபோல், கல்லூரியின் பிரதிநிதிகள் போர்வையில், 'டுபாக்கூர்' ஆசாமிகளும் (புரோக்கர்கள்), பெற்றோரை சுற்றி வருகின்றனர்.குறைந்த நன்கொடையில், சீட் பெற்றுத் தருவதாக, பணத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த செலவில், அண்டை மாநில கல்லூரிகளில் சேர்ப்பதாக ஆசை காட்டி வருகின்றனர். அனுமதி பெறாத, 'டுபாக்கூர்' கல்லூரிகளும், இவர்களை குறி வைத்து செயல்படுகின்றன.
பெற்றோர், மாணவர்கள் மீண்டும் சிக்கிக் கொள்ளக்கூடாது. பணமும் போய், எதிர்காலமும் வீணாகிவிடும். இந்திய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ பல்கலை இணைய தளங்களில், அனுமதி பெற்ற கல்லூரிகள் பட்டியலை பார்த்து, தேர்வு செய்வதே நல்லது. 'அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் சேர்ந்தால், நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு சேரும் மாணவர்கள், பல்கலை தேர்வுக்கு அனுமதிக்க மாட்டார்கள்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை ஏற்கனவே, எச்சரித்துள்ளது.








