அழகப்பா பல்கலை,
தமிழ்த்துறை முதலாம் ஆண்டு பாடத்தில், முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ்,
வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி குறித்தும், தாம்பத்ய உறவு பற்றியும் உள்ள சர்ச்சைக்குரிய கவிதைகளை நீக்க, பாடத் திட்டக்குழு கூட உள்ளது.
தமிழ் துறையில்... :
கவிஞர் வாலியின், 'நிஜகோவிந்தம்' என்ற கவிதைத் தொகுப்பு, தமிழ்த்துறையில்
ஒரு பாடமாக இடம் பெற்று உள்ளது. இதில், சர்ச்சைக்குரிய கவிதைகள் இருப்பது
குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. பல்கலை அளவில்,
ஒவ்வொரு துறைக்கும் பாடத் திட்டக்குழு உள்ளது. இதில் உள்ள நிபுணர்கள், புத்தகங்களை
ஆராய்ந்து, பாடத் திட்டத்தை அறிவிக்கின்றனர். ஆனால், ஆபாச வார்த்தைகளும்,
முன்னாள் பிரதமர்கள் குறித்த விமர்சனங்களும், எவ்வாறு பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டன என, கேள்வி எழுந்துள்ளது.
நீக்காவிட்டால்... :
பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறுகையில், ''எதன் அடிப்படையில்
இதற்கு அனுமதி வழங்கினர் என, தெரியவில்லை. பல்கலையில் கேட்டபோது,
'சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விடுகிறோம்' என, கூறிஉள்ளனர்.
நீக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இந்த நிலையில்,
'வாஜ்பாய், அத்வானியை இழிவுபடுத்தும் விதத்தில், கவிதைகள் இருப்பதை
கண்டித்து, பல்கலை முன், வரும் 28ம் தேதி, முற்றுகை போராட்டம்
நடத்தப்படும்' என, பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். பல்கலை
பதிவாளர் மாணிக்கவாசகத்திடம் கேட்ட போது, ''ஏழு பேர் கொண்ட பாடத்
திட்டக்குழு, நாளை கூட உள்ளது. இதில் ஆலோசித்து, சர்ச்சைக்குரிய பகுதி களை
நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்







