கணிதவியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க
முடியாமல் இருந்த சிக்கலான கோட்பாட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த நிகில் ஸ்ரீவாஸ்தவா,
அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனியல்ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும்
அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு சார்பில்
"ஜார்ஜ் போல்யா-2014' என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.வாஷிங்டனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற
நிகழ்ச்சியில், நிகில் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட மூவரும் அந்தப் பரிசினை பெற்றுக் கொண்டனர்.
பெங்களூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணியாற்றி வரும் நிகில்
ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்றவர்
"குவாண்டம் மெக்கானிக்ஸ்' உடன் தொடர்புடைய
கணிதவியல் கோட்பாடுகளுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும்,
1959ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். ஆனால் அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதற்கு நிகில் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.
ஹங்கேரியாவைச் சேர்ந்த கணித மேதை ஜார்ஜ்
போல்யாவின் நினைவாக, அவரது பெயரில், அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல்
கூட்டமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பரிசை வழங்கி வருகிறது







