15 ஆண்டுகளுக்கு
முன் இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை ஆக்ரமித்த பாகிஸ்தானை, இந்திய
ராணுவம் அடித்து விரட்டி மீண்டும் கைப்பற்றி வெற்றிக் கொடி நாட்டிய தினம்
இன்று. "போரில் நமக்கு வெற்றிதான். ஆனாலும் விலைமதிக்க முடியாத நமது
சகோதரர்களின் உயிரை இழக்க வேண்டியதாயிற்கு. நாட்டு மக்களுக்காக இன்னுயிரை
தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காயமடைந்த வீரர்களை
கவுரவிக்கும் விதமாகவும் ஜூலை 26ம் தேதி, கார்கில் நினைவு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.

நடுங்க வைக்கும் கார்கில் :
இந்தியாவில்
ஆறாவது பெரிய மாநிலம் காஷ்மீர். சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய
நாடுகளின் எல்லைகளை ஒட்டியுள்ளது. எங்கெங்கும் பனி மலைகளும்,
பள்ளதாக்குகளும், அருவிகளும் நிறைந்தது காஷ்மீர். இந்தியாவின் பிற
மாநிலங்களில், ஏதாவது ஒரு இடம் சுற்றுலா தலமாக காட்சி தரும்.
இம்மாநிலத்தில் ஒவ்வொரு இடமுமே சுற்றுலா தலம் தான். மாநிலத்தில் உள்ள 15
மாவட்டங்களில் கார்கிலும் ஒன்று. மலையேறும் பயிற்சி பெறுபவர்கள்,
பனிச்சறுக்கு விளையாடுபவர்கள், சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட மாதங்களில்
சென்று வரும் இடமாக கார்கில் திகழ்கிறது. இது ஸ்ரீநகரில் இருந்து 288
கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கு குளிர்காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும்
கீழ் (-- 48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ
வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், செப். 15 முதல் ஏப். 15 வரை
கார்கில் மலைச்சிகரங்களில் இருந்து திரும்பி விடுவர். ஏப்ரலின்
பிற்பாதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வது வழக்கம்.
என்ன நடந்தது:1
999 ஏப்ரலில்
கார்கிலில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு
அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் பயங்கரவாதிகளுடன்
கைகோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. ஆரம்பத்தில் 500
முதல் 1000 பேர் வரை ஊடுருவி இருக்கலாம் என இந்தியா நினைத்தது. ஆனால் 5
ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி
இருப்பது பின்னர் தெரிந்தது. இது திடீரென நடந்த ஊடுருவல் அல்ல,
பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட "ஆபரேஷன் பாதர்' என்ற பெயரில் நடத்தப்பட்ட
அத்துமீறல் இது என கிடைத்த தகவல், இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்தது.
பாகிஸ்தானின் சதியை முறியடிக்க "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999
மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் வழக்கம் போல்
பயங்கரவாதிகளை "காஷ்மீர் விடுதலை வீரர்கள்' என்று பெயரிட்டு, சர்வதேச
நாடுகளின் ஆதரவை பெற முயற்சி செய்தது. கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவம்
ஈடுபடவில்லை முதலில் கூறியது. உலக நாடுகள் இதை நம்ப மறுத்தன. பின் சில
இடங்களில் எல்லை கோடு சரியாக வரையறை செய்யப்படவில்லை என்றது. உலக நாடுகள்
பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன. இரு நாடுகளிக்கிடையேயான இந்த போர், அணு
ஆயுத யுத்தத்துக்கு வழி வகுத்துவிடுமோ என உலக நாடுகள் அச்சம்
ஏற்பட்டது.இந்தியா ராணுவம் தனது நிலைகளை கைப்பற்ற தொடங்கியது. தோல்வி
உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் பாக்.,
அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும்
பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பின்வாங்க உடன்பட்டது
பாகிஸ்தான்.ஜூலை 26ல் இந்தியா கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.
இந்தியாவுடனான ஒவ்வொரு மோதலின் போதும் பாடம் கற்கிறது பாகிஸ்தான். ஆனால்
திருந்தாமல், இன்னும் எல்லைப்பகுதிகளில் வாலாட்டி வருகிறது.







