ரயில் பயணத்தின்போது
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே ரயில்வே பாதுகாப்பு படையை தொடர்பு கொள்ள
அறிவுறுத்தியுள்ள போலீசார், அதற்கான "ஹெல்ப் லைன்' எண்களை
வெளியிட்டுள்ளனர்.ஓடும் ரயிலில்
பயணிகளை தாக்கி விட்டு, நகை மற்றும் பணத்தை பறித்துச் செல்லும் செயல்கள்
அதிகரித்துள்ளன. சில தினங்களுக்கு முன், அரக்கோணம் அருகே, ரயிலில் பெண்களை
தாக்கி, நகையை பறித்துக்கொண்டு, மர்ம கும்பல் ஓட்டம் பிடித்தது. இதனால்,
ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். இவர்களின்
உதவிக்காக, 24 மணி நேர "ஹெல்ப் லைன்' எண்ணை, சேலம் ரயில்வே கோட்டம்
வெளியிட்டுள்ளது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் கவுன்டர், பயணிகள்
ஓய்வறை, முன் பதிவு டிக்கெட் பெறுமிடம், பிளாட் பாரம் என பல இடங்களிலும்
"ஹெல்ப் லைன்' எண் ஒட்டப்பட்டுள்ளது.
பயணத்தின்போது
ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், பெண்கள், 90039 56726, 0427 - 2331 809 என்ற
எண்களுக்கு அழைக்கலாம். அழைப்பை பெறும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி,
பிரச்னை குறித்து கேட்பார். பயணித்துக் கொண்டிருக்கும் ரயில், கோச் எண்,
தெரிந்திருந்தால் எக்ஸ்பிரஸ் பெயர் அல்லது ரயிலின் எண் தெரிவிக்க வேண்டும்.
"அடுத்த ஸ்டேஷனில், நீங்கள் இருக்கும் இடத்துக்கு, ரயில்வே பாதுகாப்பு படை
போலீசார் வருவர். அதுவரை தைரியமாக இருங்கள்,' என, அறிவுரை வழங்குவர்.
தொடர்பு கொண்டவரின் பெயர், போன் நம்பர் குறித்த விவரம், பணியில் உள்ள
ஆர்.பி.எப்., வீரருக்கு தெரிவிக்கப்படும். சம்மந்தப்பட்ட ரயில் எங்கு வந்து
கொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அவர்கள், அப்பெட்டியில் ஏறுவர்.
உடனடியாக, பயணியை மீட்பதுடன், குற்றம் சுமத்தப்படுவர் அருகில் இருப்பின்,
அவரை கைது செய்வர்; இல்லையேல், பயணத்தின்போதே வழக்குப்பதிவு செய்யப்படும்.
ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோட்டத்துக்கு கோட்டம்
"ஹெல்ப்லைன்' எண் மாறு படும். ரயிலில் ஓட்டினால், வீண் குழப்பம் ஏற்படும்.
முடிந்தவரை, அதிக மானோர் உள்ள பெட்டியில், பெண்கள் பயணிக்க வேண்டும்.
முன்பதிவு பெட்டிகளில் உள்ள ரயில்வே போலீசார், அவ்வப்போது பொதுபெட்டியில்,
ரோந்து நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது,' என்றார்.







