பாடப் புத்தகங்கள்
மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக
கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல்
கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி, "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாட நூல் கழகமானது,
தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழகம்,
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை இலவசமாக
அச்சிட்டு வழங்குவதுடன், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும்
புத்தகங்களை அளித்து வருகிறது.
இந்த நிலையில்,
பள்ளிக் குழந்தைகளுக்கென பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து
வருகிறது. அவர்களுக்கு வரைபடப் பெட்டி, உலக வரைபடங்கள் என பல்வேறு புதிய
திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்
குழந்தைகளுக்குத் தேவைப்படும் புத்தகப் பை உள்ளிட்ட பொருள்கள், பள்ளிக்
கல்வித் துறையின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இயக்குநர்கள் மூலம்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையைப்
போக்கி ஒரே அமைப்பின் கீழ் அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்யும்
வகையில், தனியாக ஒரு கழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான
அவசரச் சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு
பாட நூல் கழகம் என்பதை "தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள்
கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அவசரச் சட்டத்தைச்
செயல்படுத்தும் வகையில், இதற்கான சட்ட மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை
தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை முதல்வர் ஜெயலலிதா சார்பில்,
நிதித்துறை, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.







