சென்னையில் பள்ளி
செல்லா குழந்தைகள், 5,000க்கும் அதிகமானோர் இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதனால் காவல்துறை, மாநகராட்சி உட்பட பல்வேறு துறைகள்
இணைந்து, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் நடத்த
முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு
: சென்னையில் கடந்த கோடை விடுமுறையின்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில்,
1,150 குழந்தைகள் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
அடையாளம் காணப்பட்ட இந்த குழந்தைகளை, ஆங்காங்கே உள்ள உண்டு, உறைவிட
பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள்
தற்போது இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அடுத்த மாதம் :
பெரும்பாலான குழந்தைகள் கடைகளில் வேலை பார்ப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் மாநகராட்சி, காவல்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியவை இணைந்து
ஒரு குழு அமைத்து, சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த
கணக்கெடுப்பை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு
அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
இதுகுறித்து
மாநகராட்சி கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எந்த வகையான
வர்த்தகத்தில் குழந்தைகள் அதிகமாக பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது
கண்டறியப்படும்.அந்த வர்த்தகர்களுடன் பேசி, குழந்தை தொழிலாளர்களை பணிக்கு
நியமிப்பது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.குழந்தை
தொழிலாளர்களை கண்டறிய காவல்துறையின் உதவியுடன் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதை தவிர 3, 5, 8ம் வகுப்பு குழந்தைகளின் அடைவு திறன் குறித்து சோதனை
நடத்தப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.