பத்தாம் வகுப்பு
மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. 2
தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் என்ற
கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு தேர்வுகளையும் ஒரே
நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை பள்ளிகளில் காலியாக இருந்த இடங்களில் புதிய ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, தற்காலிக ஆசிரியர்கள் நடத்தி வந்த பாடங்களை புதிதாக
நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நடத்துவார்கள். தற்காலிக ஆசிரியர்கள்
பட்டதாரிகளுக்கு 7 மாதங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 4,000, முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5,000 ஊதியம் பெற்று வந்தனர்.
புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதால் தற்காலிக ஆசிரியர்கள் நிலை என்ன
என்பது தெரியவில்லை. அடுத்தகட்டமாக, பொதுத்தேர்வின்போது பறக்கும்படை,
கேள்வித்தாள் காப்பு மைய பொறுப் பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர் போன்ற
பணிகளில் ஆசிரியர்களே நியமிக்கப்பட உள்ளனர்.
அதற்காக, உயர்நிலை,
மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் எண்ணிக்கை
ஆகியவற்றை கணக்கெடுத்து அனுப்ப வேண்டும். வரும் 28க்குள் இந்த பட்டியல்
தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்வுத் துறை
உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பட்டியல் வந்த பிறகு பொதுத் தேர்வு எழுத
உள்ள மாணவ, மாணவியரின் இறுதிப் பட்டியலை (நாமினல்ரோல்) அந்தந்த பள்ளி
தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதனால், ஆசிரியர்கள் குறித்த
விவரங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சேகரித்து வருகின்றனர்.
10ம் வகுப்பு, பிளஸ்
2 துணைத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி 17ம் தேதி வரை நடக்கும்.
அதன்பிறகு ஆசிரியர்கள் பட்டியல், நாமினல்ரோல் ஆகியவற்றை பள்ளி தலைமை
ஆசிரியர்கள் அனுப்ப வேண்டும். இதனால், இப்போதே அந்த பட்டியல்களை தயார்
நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.







