புதுச்சேரி:
துவக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு நடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை இயக்குனர் குமார்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில்
கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட
பழங்குடியினர், மிகமிக பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்
சமூகத்தினருக்கான 19 தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்
ஊனமுற்றோர்க்கான 5 துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூன்
மற்றும் ஜூலை மாதங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது.
மொத்தம் 302
விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டது. அதில்,
தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 15, மிகமிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தினர், உடல் ஊனமுற்றோர் பிரிவு
ஆகியவற்றுக்கு தலா ஒன்று என, மொத்தம் 18 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் பள்ளிக்
கல்வித்துறை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் https://www.py.gov.in
அல்லது http://schooledn.puducherry.gov.in என்ற வலைத்தளத்திலும் தெரிந்து
கொள்ளலாம்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, புதுச்சேரி பள்ளிக் கல்வி
இயக்ககத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இவ்வாறு செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







