விருதுநகர்
மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர்,
ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாற்றுத்திறனாளியான நான்,
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன்.
மேலும், தகுதி தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றுள்ளேன். தேர்வாணையம் இடைநிலை
ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. நானும் சென்றேன். வேலை
கிடைக்கும் என காத்திருந்தேன். இதனிடையே, ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள
669 காலி பணியிடங்களை, அவர்களை கொண்டே நிரப்ப அறிவிப்பாணை வெளி
வந்ததாகவும், வேறு காலி பணியிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. நான்
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன்.
ஆதிதிராவிடர்
பள்ளிகளில் உள்ள 669 காலி பணியிடங்களும் இடஒதுக்கீட்டு முறையில்,
ஆதிதிராவிடர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என கூறப்படவில்லை. தகுதித்
தேர்வில் 64.47 மதிப்பெண் பெற்றவருக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியிருந்தால் எனக்கு ஆசிரியர் பணி
கிடைத்திருக்கும். எனவே, 669 பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை ரத்து
செய்து, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி எனக்கு பணி வழங்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ‘பணி நியமன
முறையில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இம்மனுவிற்கு அரசு தரப்பில்
பதில் மனு 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.







