அரசு உயர்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், எஸ்.டி., மாணவியருக்கு கராத்தே
பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பழங்குடியின மக்கள் அதிக
அளவில் நீலகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய
மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். பழங்குடியின மாணவியரின் பாதுகாப்பு
கருதி, அவர்களுக்கு கராத்தே பயிற்சியளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தர்மபுரி மாவட்டத்தில், 90 பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில், 69
பள்ளிகள், சேலம் மாவட்டத்தில், 105 பள்ளிகள், நீலகிரி மாவட்டத்தில், 33
பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில், 185 பள்ளிகளும் சேர்த்து மொத்தம்,
482 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து
பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது: இன்றைய சூழலில் பெண்களுக்கு பல
இடங்களில் பல சூழ்நிலைகளில், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெரு நகரங்களில்
மட்டுமின்றி, கிராமங்களிலும், பெண்கள் பல இடர்பாடுகளை சந்திக்க
வேண்டியுள்ளது.
இதற்காக
மாணவியருக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு
உருவாகியுள்ளது. மாணவியர் மன தைரியத்துடன் சமுதாயத்தை எதிர்கொள்ள கராத்தே
பயிற்சி அவசியமாகிவிட்டது. அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை, 3
மாதங்களுக்கு, தகுதி வாய்ந்த கராத்தே பயிற்சியாளர்களை கொண்டு, மாணவியருக்கு
பயிற்சியளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாலைவேலையில், வாரத்துக்கு
இரண்டு நாட்கள், ஒரு மணி நேரம் வீதம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு
பள்ளிக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் நிதியை, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி
ஒதுக்கீடு செய்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.







